தஞ்சை சாமிநாதன் உடலை மதம், மொழி பாராமல் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அமீரக மனிதாபிமான உள்ளங்கள்!
அபுதாபியில் உயிரிழந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் உடலை மதம், மொழி பார்க்காமல் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர் அமீரக மனிதாபிமான உள்ளங்கள்.
துபாய்: அபுதாபியில் உயிரிழந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் உடலை மதம், மொழி பார்க்காமல் அமீரக மனிதாபிமான உள்ளங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். உடலை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்த அமீரக மனிதாபிமான நெஞ்சங்களுக்கு சாமிநாதனின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளான தமிழகத்தின் காயிதே மில்லத் பேரவை மற்றும் கேரளாவின் கேஎம்சிசி நிர்வாகிகள் முயற்சியால் அமீரகத் தலைநகர் அபுதாபியில் மரணமடைந்த தஞ்சை சாமிநாதன் உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் மேலையூருக்கு கொண்டுவரப்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள மேலையூர் கிராமத்தைச் சார்ந்த சாமிநாதன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் அபுதாபியில் மரணமடைந்தார். அவரது உடல் ஷேக் கலீஃபா மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.
தஞ்சாவூரில் இருந்து அவரது உறவினர்கள் பிரேதத்தை அனுப்பி வைக்குமாறு உதவி கோரினர். இதையடுத்து ஆவணங்கள் மற்றும் பயண ஏற்பாடுகளை அமீரக காயிதே மில்லத் பேரவை, கேஎம்சிசி நிர்வாகத்தோடு இணைந்து மேற்கொண்டது.
சாமிநாதன் உடலை தஞ்சை மாவட்டத்தில் உள்ள அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பாக்கியராஜ் என்பவரையும் உடன் அனுப்பி வைத்தனர். இப்பணிகளை மேற்கொண்ட அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல அமைப்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி, கேம்சிசி நிர்வாகி அபூபக்கர், ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் சாதிக் பாட்ஷா ஆகியோருக்கு மறைந்த சாமிநாதன் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.