"எஸ் 400 சிஸ்டம்".. அமெரிக்கா என்ன தடை போட்டாலும்! இந்தியாவுடன் "நிற்கும்" ரஷ்யா.. பரபரப்பு சவால்!
மாஸ்கோ: அமெரிக்கா என்ன மாதிரியான தடைகளை விதித்தாலும் எஸ் 400 எனப்படும் ஏவுகணை மறிப்பு சிஸ்டமை கண்டிப்பாக இந்தியாவிற்கு வழங்குவோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
Recommended Video
ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக சர்வதேச பண பரிவர்த்தனை தளமான SWIFT தளத்தில் இருந்து ரஷ்யாவை நீக்க உலக நாடுகள் முடிவு செய்துள்ளன.
அதுமட்டுமின்றி பல்வேறு உலக நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து முதலீட்டை திரும்ப பெற்று, அங்கு கடையை சாத்தி உள்ளன. அதோடு ரஷ்யாவின் பங்கு சந்தையும் கடந்த 6 நாட்களாக இயங்கவில்லை. பொருளாதார தடையால் ரஷ்யாவின் பண மதிப்பு டாலருக்கு நிகராக 110 ரூபிளுக்கும் மேல் சரிந்து உள்ளது.

ரஷ்யா தடை
இந்த நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு இருப்பதால் ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமாக ரஷ்யாவில் இருந்து ராணுவ ரீதியான பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பொருளாதார தடை விதிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இந்தியா ரஷ்யாவிடம் எஸ் 400 எனப்படும் ஏவுகணை மறிப்பு சிஸ்டமை வாங்க டீலிங் பேசி உள்ளது.

இந்தியா தடை
இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் இந்தியாவிற்கு இது ஏற்றுமதி செய்யப்பட உள்ள நிலையில் அமெரிக்கா இதை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. தற்போது பொருளாதார தடை காரணமாக எஸ் 400 ஏவுகணை மறிப்பு சிஸ்டத்தை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்க கூடாது என்று அமெரிக்காவில் இருந்து அழுத்தம் அதிகம் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலாளர் டொனால்ட் லியு இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை கூட்டத்தில் பேசினார்.

பொருளாதார தடை
இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடை பற்றி பேசிய அவர், இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க மறுத்துவிட்டது. இந்தியா வெற்றிபெறும் நபர்களின் பக்கம் இருக்க பார்க்கிறது. இந்திய மீது பொருளாதார ரீதியாக Countering America's Adversaries Through Sanctions Act (CAATSA) எனப்படும் தடை இந்தியா மீது விதிக்கப்படுமா என்பதை போக போகத்தான் பார்க்க வேண்டும். அது பிடன் கையில்தான் இருக்கிறது. அவர் நினைத்தால் சில விலக்குகளை கொடுக்கலாம் அல்லது தடையும் விதிக்கலாம்.இந்தியா மீதான பொருளாதார தடை பற்றி பிடன்தான் முடிவு எடுக்க வேண்டும்.

ரஷ்யா நிலைப்பாடு
நானே முன்கூட்டியே எதையும் பேச விரும்பவில்லை என்று புதிர் வைத்து பேசினார். இந்த நிலையில்தான் இந்த விஷயத்தில் ரஷ்யா தனது உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.என்ன எஸ் 400 சிஸ்டத்தை கொடுப்போம் என்று ரஷ்யா கூறியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் டென்னிஸ் அலீபோவ் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, எஸ் 400ஐ இந்தியாவிற்கு விற்பனை செய்வதில் எந்த தடையும் எங்களுக்கு கிடையாது. இந்த டீல் தொடர்ந்து நடக்க எங்களிடம் நிறைய வழிகள் உள்ளன.

இந்தியா எஸ் 400?
இதற்கு முன் எங்களுக்கு எதிராக இருந்த பொருளாதார தடையாக இருந்தாலும் சரி.. இனி அவர்கள் விதிக்க போகும் பொருளாதார தடையாக இருந்தாலும் சரி. கண்டிப்பாக அது எஸ் 400 சிஸ்டத்தை இந்தியாவிற்கு விற்பதில் இருந்து எங்களை தடுக்காது. சர்வதேச மேடையில் இந்தியா நடுநிலையாக இருக்கிறது. நாங்களும் இந்தியாவும் நல்ல நண்பர்கள்.

அமெரிக்கா பொருளாதார தடை
எங்களிடம் தீவிர, நெருக்கமான உறவு வரலாற்று ரீதியாக இருந்து வந்துள்ளது. இந்தியாவின் நடுநிலையான முடிவிற்கு நாங்கள் நன்றியோடு இருப்போம். ஐநாவில் இந்தியா எங்களுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. இந்த பிரச்சனையின் ஆழத்தை அவர்கள் உணர்ந்து உள்ளனர். அது எங்களுக்கு நிம்மதி அளிக்கிறது என்று இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் டென்னிஸ் அலீபோவ் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். சீனாவுடன் போர் ஏற்பட்டால் இந்தியாவிற்கு எஸ் 400 அவசியம் என்பதால் இந்தியாவிற்கு ரஷ்யா உறுதுணையாக இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications