மின்னல் வேகத்தில் பிரபலமான நாதெல்லா: ட்விட்டரில் 1 லட்சம் பாலோயர்ஸ்
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்ற சத்யா நாதெல்லாவை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்திற்குள் 1 லட்சமாக அதிகரித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா பொறுப்பேற்றுள்ளார். ஒரு இந்தியர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக ஆகியிருப்பது இதுவே முதல் முறை.
இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் நாதெல்லாவை பார்த்து பெருமை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து நாதெல்லா நேற்று தான் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். முன்னதாக அவரை ட்விட்டரில் 60 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தனர். ஆனால் தற்போது சிஇஓ ஆன பிறகு அவர் ட்வீட் செய்த பின்னர் 24 மணிநேரத்திற்குள் கூடுதலாக 40 ஆயிரம் பேர் அவரை ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். தற்போது அவரை மொத்தம் 1 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள்.
பத்திரிக்கையாளர்கள், தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள், பிரபலங்கள், மாணவர்கள் என்று ஏராளமானோர் தற்போது அவரை ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.