சவுதியில் 74 வயது முதியவருக்கு 350 கசையடி கொடுக்க கோர்ட் உத்தரவு
ரியாத்: சவுதி அரேபியாவில் காரில் ஒயின் பாட்டிலுடன் சிக்கிய 74 வயது இங்கிலாந்து முதியவருக்கு 350 கசையடி வழங்கப்பட உள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கார்ல் ஆன்ட்ரீ(74). எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும் அவர் கடந்த 25 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் வசித்து வருகிறார். கார்ல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காரில் செல்கையில் போலீசார் அவரது வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது காரில் ஒயின் பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மது தடை செய்யப்பட்டிருந்தும் விதிமுறையை மீறி காரில் ஒயின் பாட்டில் வைத்திருந்ததற்காக கார்ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 350 கசையடி அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
அவர் சிறை தண்டனையை முடித்த பிறகு அவருக்கு கசையடி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறது. கார்ல் தனது ஓராண்டு கால தண்டனையை முடித்துவிட்டார். இந்நிலையில் மூன்று முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கார்லுக்கு கசையடி அளித்தால் அவர் இறந்துவிடுவார் என அவரது குடும்பத்தார் அஞ்சுகிறார்கள்.
கார்லை விடுவித்து அவரை கசையடியில் இருந்து காப்பாற்றுமாறு அவரது குடும்பத்தார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கேமரூன் சவுதி அதிகாரிகளுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications