வளைகுடா நாடுகளிலும் நுழைந்தது... செளதி அரேபியாவில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது!
ரியாத்: உலகை மிரட்டி வரும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது வளைகுடா நாடுகளிலும் நுழைந்துள்ளது. செளதி அரேபியாவில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் செளதி அரேபியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகம். செளதியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 549,000. இங்கு கொரோனாவால் இதுவரை 8,836 பேர் உயிரிழந்துள்ளனர். செளதி அரேபியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் போடப்பட்டும் வருகின்றன.
செளதி அரேபியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கொரோனா கால கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டிருந்தன. குறிப்பாக முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தன.

13 நாடுகளில் ஓமிக்ரான்
தற்போது உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு இப்போது வளைகுடா நாடுகளுக்குள்ளும் நுழைந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் பாதிப்பு உலகின் 13 நாடுகளில் பரவி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் தென்னாப்பிரிக்காவுக்கான விமான சேவைகளை ரத்து செய்திருக்கின்றன.

இந்தியா விமான சேவை தாமதம்
இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 15-ந் தேதி முதல் சர்வதேச விமான சேவையை இந்தியா தொடங்க திட்டமிட்டிருந்தது. ஆனால் ஓமிக்ரான் பரவலைத் தொடர்ந்து சர்வதேச விமான சேவை தொடங்கப்படுவதில் தாமதம் ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

செளதியில் ஓமிக்ரான் பாதிப்பு
இந்த நிலையில் வட ஆப்பிரிக்காவில் இருந்து செளதி அரேபியா வந்த ஒருவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பரிசோதனையில் அவருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் செளதி அரேபியாவில்தான் முதல் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video

வட ஆப்பிரிக்கா விமான சேவைகள் ரத்து?
கடந்த வாரம் முதல் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் 7 விமான சேவைகளுக்கு செளதி அரேபியா தடை விதித்திருந்தது. ஆனால் வட ஆப்பிரிக்காவுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்படவில்லை. தற்போது வட ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வட ஆப்பிரிக்காவுக்கான விமான சேவைகளையும் செளதி அரேபியா ரத்து செய்யலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications