சவூதி ஆண்களுக்கு திடீர் திருமணத் தடை... பாக், வங்கதேச பெண்களை மணக்கத் தடை!
ரியாத்: சவூதி அரேபிய அரசு சில நாடுகளில் வசிக்கும் சவூதி அரேபியப் பெண்களை தங்களது நாட்டு ஆண்கள் மணக்க தடை விதித்துள்ளது.
அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், சாட் மற்றும் மியான்மர் நாட்டுப் பெண்களை சவூதி அரேபிய ஆண்கள் திருமணம் செய்யக் கூடாதாம்.
சர்ச்சைக்குரிய பல சட்ட திட்டங்களுடன் கூடிய நாடு சவூதி என்பதால் இந்த புதிய திருமணத் தடையும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5 லட்சம் பெண்கள் இந்த நான்கு நாடுகளிலும் வசித்து வருகிறார்கள்.
இந்தத் தடை குறித்து மெக்கா போலீஸ் இயக்குநர் அஸ்ஸாப் அல் குரேஷி கூறுகையில், வெளிநாட்டினரை, குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் சவூதி அரேபியப் பெண்களை மணப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற திருமணங்களுக்கு கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திருமணத்திற்கு முன்பு தாங்கள் மணக்கப் போகும் பெண்கள் குறித்த விவரத்தை சமர்ப்பிப்பதோடு, ஆட்சேபனை இல்லை சான்றிதழையும் பெற வேண்டும்.
மனுதாரருக்கு வயது 25க்கு மேல் இருக்க வேண்டும். உள்ளூர் மேயரிடம் தங்களது அடையாளச் சான்றிதழ்களை ஒப்பம் பெற்று வர வேண்டும். குடும்ப அட்டையும் இணைக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே திருமணமானவராக இருந்தால் அவரது மனைவி உடல் ஊனமுற்றவரா அல்லது பெரும் வியாதியஸ்தரா என்பது குறித்து மருத்துவச் சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும் என்றார் அவர்.
சவூதி அரசின் புதிய திருமணத் தடை சவூதி ஆண்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.