சவுதியில் நிபந்தனைகளுடன் பெண்கள் கார் ஓட்ட அனுமதியா?.. புரளி என்கிறது அரசு
ரியாத்: சவுதி அரேபியாவில் நிபந்தனைகளுடன் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இஸ்லாமிய சட்டம் கடுமையாகப் பின்பற்றப்படும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இங்கு பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் உள்ளன. கார் ஓட்டக் கூட அனுமதி கிடையாது. இதனை எதிர்த்து பெண்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனைகளுடன் அவர்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அத்தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே கார் ஓட்டலாம், அதுவும் அவர்கள் இரவு 8 மணி வரை மட்டுமே கார் ஓட்டலாம் என்றும், கார் ஓட்டும் போது பெண்கள் ‘மேக்-அப்' செய்து கொள்ள கூடாது என்று அரசு அனுமதித்திருப்பதாக முன்பு செய்தி வெளியானது.
அதேபோல், கார் ஓட்டும் பெண்கள் தங்களது தந்தை, கணவர், சகோதரர் அல்லது மகன் என ஆண் உறவினர்களின் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த செய்தி கூறியது.
இத்தகைய நிபந்தனைகளின் பேரில் பெண்கள் கார் ஓட்ட சவுதி அரேபிய மன்னரின் ஆலோசனைக் கவுன்சில் பரிந்துரை செய்திருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன.
ஆனால், ஊடகங்களில் வெளியான இத்தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இது கற்பனையான, புனை செய்தி. இதில் உண்மை இல்லை. சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டுள்ள தடை நீடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications