ஊழியர்களுக்கு சம்பளத்தோடு ஒரு மாதம் லீவு கொடுக்கனும்.. வருகிறது புது சட்டம்.. சவுதி அரேபியாவில்!
சவுதி: வீட்டு வேலைகளுக்குச் சவுதி செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் இந்தியர்களே அதிகம் உள்ளனர். இருப்பினும், அங்கே இந்த பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்ற விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே இந்த பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இப்போது சவுதி அரசு புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளது.
நமது நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு, குறிப்பாகச் சவுதிக்குச் செல்வது வழக்கம். இருப்பினும், அங்கே அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே வீட்டு வேலை செய்ய சவுதி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அரசு வரும் செப். மாதம் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது.
புதிய சட்டம்: இந்த சட்டத்தின்படி இனி ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 நேரம் மட்டுமே பணி நேரமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், ஆண்டுக்கு ஒரு மாதம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் ஆகியவை கட்டாயமாக்கப்படுகிறது. அவர்கள் தாயகம் சென்று வர ஆகும் செலவையும் சவுதியில் உள்ள உரிமையாளர்களே ஏற்க வேண்டும்.
இது மட்டுமின்றி அங்குள்ள உரிமையாளர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி வைத்துக் கொள்வதையும் இந்த சட்டம் தடை செய்கிறது.. மேலும், தொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொடர்பு கொள்ளவும் இது அனுமதிக்கிறது.. உரிமையாளர்களின் மோசமான நடத்தை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சூழல்களில் பணியாளர்கள் தங்கள் பலன்களை இழக்காமல் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிக்கவும் இது அனுமதிக்கிறது. மேலும், முறையான காரணங்கள் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டால் அதற்கான இழப்பீடுகளையும் பணியாளர்கள் பெறலாம்.
பணியாளர்கள், முதலாளிகள் என இரு தரப்பையும் பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தங்களில் காப்பீடுகளைக் கட்டாயமாக்குவது உள்ளிட்ட விஷயங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சவுதி திட்டம்: கடந்த ஜூலை மாதம் முதலே வீட்டு வேலைக்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உடன் போடப்படும் புதிய ஒப்பந்தங்களை ஊதிய பாதுகாப்பு அமைப்பில் சவுதி அரசு சேர்த்தது.. வரும் 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் தற்போதுள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஒப்பந்தங்களையும் படிப்படியாக இதில் சேர்க்கவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
எதற்காக இந்த சட்டம்: சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்ய மட்டும் சுமார் 39 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். அங்கே அவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள், குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இருப்பினும், அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யச் சவுதி உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற விமர்சனம் இருந்து தொடர்ந்து அதிகரித்தது. அதைக் கருத்தில் கொண்டே சவுதி அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
அதேநேரம் இந்த புதிய சட்டம் இந்தப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்கவில்லை.. ஏனென்றால் வழக்கமான தொழிலாளர் சட்டங்களுக்குள் இந்த வீட்டு வேலைக்கு வரும் பணியாளர்கள் கொண்டு வரப்படவில்லை. இதனால் மற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் பல விஷயங்கள் வீட்டு வேலைக்காகச் செல்வோருக்குக் கிடைப்பதில்லை.
இருக்கும் சிக்கல்கள்: மேலும், குறைந்தபட்ச ஊதியம் இல்லாதது, எது வேலை நேரம் என்பதைத் தெளிவாகக் கணக்கிடாதது, ஓவர்டைமிற்கான ஊதியத்தில் தெளிவு இல்லாதவை எனக் குழப்பங்கள் தொடரவே செய்கிறது. இதனால் இன்னுமே கூட சிஸ்டம் அங்கே உரிமையாளர்களுக்கே அதீத பவரை கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
அங்கு வீட்டு வேலைக்காக வரும் புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்களே குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளனர். அங்கு இந்தியர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், தூதரக ஆதரவும் சரி & ஆட்சேர்ப்பு செயல்முறையும் சரி சிக்கலாகவே இருக்கிறது. அதில் எல்லாம் கவனம் செலுத்தித் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications