இஸ்லாமிக் நேட்டோ.. பாகிஸ்தானுடன் சவுதி கை கோர்க்க காரணம் என்ன? விஷயம் இதுதான்
இஸ்லாமாபாத்: கடந்த 17ம் தேதி பாகிஸ்தானுக்கும், சவுதியும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், 'இஸ்லாமிக் நேட்டோ' என் அழைக்கப்படுகிறது. ஏன் பாகிஸ்தானுடன் சவுதி சேர்ந்தது? இதனால் ஆசிய நாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பது கேள்விகளாக உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி, சவுதி மீது வேறு எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும், அது பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக பார்க்கப்படும். அதேபோல, பாகிஸ்தான் மீது இந்தியா உட்பட வேறு எந்த நாடுகள் தாக்குதல் நடத்தினாலும், அது சவுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலாக பார்க்கப்படும். இதுதான் இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சம். இது நேட்டோ அமைப்பின் சரத்து 5ஐ பிரதிபலிப்பதாக இருக்கிறது. எனவேதான் இந்த ஒப்பந்தம் இஸ்லாமிக் நேட்டோ என்று அழைக்கப்படுகிறது.

மெக்கா மற்றும் மதினாவை பாதுகாக்க பாகிஸ்தானின் உதவி சவுதி அரேபியாவுக்கு தேவைப்படுகிறது. உலகின் முன்னணி ராணுவத்தில் பாகிஸ்தானும் ஒன்று என்பதால், சவுதிக்கு பாகிஸ்தானின் நட்பு மிக முக்கியம். சவுதியை பொறுத்தவரையில் அது சன்னி முஸ்லிம் நாடு. ஆனால் பக்கத்தில் இருக்கும் ஈரான் ஷியா முஸ்லிம் நாடு. எனவே இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல்கள் இருந்து வருகின்றன. ஈரான் அணுசக்தியை தீவிரமாக பயன்படுத்துகிறது என்பதால் இஸ்லாமிய நாடுகளின் தலைமையாக ஈரான் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதை தடுத்து தலைமை பொறுப்பை தான் கைப்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா கை கோர்த்து இருக்கிறது.
சவுதி அரேபியாவில் பெரிய அளவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் ராணுவம் கிடையாது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் பெரியது. எனவே பாகிஸ்தானிடம் இருந்து ராணுவ வலிமையையும், போர் தடுப்பு யுக்திகளையும், குறிப்பாக அணு ஆயுத சக்தியையும் பெற்றுக்கொள்ள இந்த ஒப்பந்தம் சவுதிக்கு உதவியாக இருக்கிறது. அதே நேரம், என்னதான் ராணுவத்தில் வலிமை மிக்க நாடாக இருந்தாலும் பொருளாதாரத்தில் பாகிஸ்தான் தவழும் குழந்தை. அவ்வப்போது பாகிஸ்தானில் பொருளாதாரம் சரிந்து, நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இந்த சமயங்களில் எல்லாம் சவுதிதான் பெரிய அளவில் நிதி உதவி செய்து பாகிஸ்தானை காப்பாற்றி வந்தது. எனவே நிதி தேவைகளுக்கு சவுதியுடன் கைகோர்ப்பது பாகிஸ்தானுக்கும் லாபம் தரும் விஷயமாக மாறியிருக்கிறது. மறுபுறம் ஈரானுடன், பாகிஸ்தானுக்கு பெரிய அளவுக்கு எந்த சண்டை சர்ச்சரவுகளும் கிடையாது. ஆனால், பாகிஸ்தானும் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கக்கூடிய நாடு என்பதால், இயல்பிலேயே அது சவுதி அரேபியாவுடன் கைகோர்க்க தயாராக உள்ளது.
இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான காலம் மிக முக்கியமானது. அதாவது கத்தாரில், ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென இஸ்ரேல் விமானப்படை கத்தாருக்குள் புகுந்து தாக்கியது. இந்த சம்வம் நடந்து ஒரு வாரத்தில் பாகிஸ்தான்-சவுதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. எனவே எதிர்காலத்தில் இஸ்ரேல் நம்மையும் தாக்கலாம் என்கிற அச்சத்தில் கூட, சவுதி இந்த ஒப்பந்தத்தை போட்டிருக்கலாம்.
எப்படி பார்த்தாலும் பாக்-சவுதி ஒப்பந்தம் இஸ்லாமிக் நேட்டோவை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, அது அரபு தேசத்தின் புதிய சாம்ராஜ்ஜியமாக உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications