ரியாத்தில் போலீஸ் உயர் அதிகாரியை சுட்டுக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
ரியாத்: ரியாத்தில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் மேற்கே உள்ள அல் தவாதிமி மாகாணத்தில் இருக்கும் அல் அர்ஜா பகுதியில் போலீஸ் உயர் அதிகாரியான கர்னல் கிதாப் மஜீத் அல் ஹம்மாதி செவ்வாய்க்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் செல்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை தங்கள் ஆட்கள் தான் சுட்டுக் கொன்றதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சவுதி பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியாத்தின் தென் பகுதியில் உள்ள காவல் நிலையத்தை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர்.
இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார், போலீஸ் வாகனங்கள் பல சேதம் அடைந்தன. ஹம்மாதி அல் குவையியா பகுதியில் உள்ளூர் பாதுகாப்பு பிரிவின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.
தீவிரவாதத்தை ஒழிக்க சூளுரை எடுத்துள்ள சவுதிக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெரும் தலைவலியாக உள்ளனர்.