"தூங்கும் இளவரசர்.." 20 ஆண்டுகளுக்கு பின் ஒரு வழியாக கண் விழித்தார்? என்ன நடந்தது! உண்மை என்ன?
ரியாத்: கடந்த 20 ஆண்டுகளாகத் தூங்கும் இளவரசர் என்று அழைக்கப்படுபவர் அல் வலீத். இவர் ஒருவழியாகக் கண் விழித்துவிட்டதாக இணையத்தில் வீடியோவுடன் தகவல் பரவி வருகிறது. யார் இந்த அல் வலீத்.. இவருக்கு என்ன நடந்தது. உண்மையாகவே இப்போது இவர் கண் விழித்துவிட்டரா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் ஆட்சி செய்கிறது. ஆனால், வெகு சில நாடுகளில் மட்டும் மன்னராட்சி இருக்கிறது.. பொதுவாகவே மன்னர் குடும்பங்கள் மீது மக்களுக்கு ஒரு பிரமிப்பு இருக்கவே செய்யும். அது அதிகாரத்தில் இருந்து விலகி இருக்கும் இங்கிலாந்து அரச குடும்பமாக இருந்தாலும் சரி, மொத்த அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் சவுதி அரச குடும்பமாக இருந்தாலும் சரி..!

சவுதியின் தூங்கும் இளவரசர்
இதனால் அவர்களின் வாழ்க்கை முறையும் ஆடம்பரமும் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும். என்ன தான் கற்பனை செய்யவே முடியாத சொத்தும் வசதியும் இருந்தாலும் கூட விதி என்பதை அரச குடும்பத்தினரை எல்லாம் ஸ்பெஷலாக பார்க்காது. அடிக்க வேண்டும் என நினைத்துவிட்டால் விதி நம்மை அடித்துத் துவைத்துவிடும். அப்படி பெரும் துயரத்தை எதிர்கொண்டு இருப்பவர் தான் சவுதியின் "தூங்கும் இளவரசர்" அல்-வலீத்.
அல்-வலீத் பின் காலித் பின் தலால் என்ற இவர் கடந்த ஏப்ரல் மாதம் தான் 36வது பிறந்த நாளைக் கொண்டாடினார். ஆனால், தனக்கு இவ்வளவு வயது ஆகிவிட்டது கூட அவருக்குத் தெரியாது. ஏனென்றால் அவர் கடந்த 20 ஆண்டுகளாக... அதாவது தனது 16 வயது முதலே கோமாவில் தான் இருக்கிறார். இதனால் தான் மக்கள் அவரை 'தூங்கும் இளவரசர்' என்று குறிப்பிடுகிறார்கள்.
மீண்டு வந்த இளவரசர்?
இதற்கிடையே "தூங்கும் இளவரசர்" கோமாவில் இருந்து மீண்டு வந்துவிட்டதாகத் தகவல் பரவின. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டானது. அதில் மருத்துவமனையில் படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் நபர் இருக்கிறார். அவரை சுற்றி பலரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். படுத்திருக்கும் அந்த நபர் ஒருவரை அழைத்துக் கைகுலுக்குவது போல இருக்கிறது. இந்த வீடியோவை வைத்தே தூங்கும் இளவரசர் கோமாவில் இருந்து மீண்டதாகச் செய்திகள் பரவி வருகிறது.
உண்மை என்ன
ஆனால், நாம் செக் செய்ததில் அது பொய்யான தகவல் என்பது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில் இருப்பவர் தூங்கும் இளவரசர் அல் வலீத்தே இல்லை. அதில் இருப்பவர் சவுதி கோடீஸ்வரரும் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரருமான யாசீத் முகமது அல்-ராஜ்ஹி என்பவர் ஆவார். இவர் சமீபத்தில் நடந்த ஜோர்டான் கார் ரேஸில் காயமடைந்தார். இந்த விபத்தில் ராஜ்ஹிக்கும் கோ டிரைவருக்கும் மிக மோசமான காயம் ஏற்பட்டிருந்தது.
இருப்பினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையால் அவர்கள் பிழைத்தனர். இந்த வீடியோவை வைத்தே அல் வலீத் கோமாவில் இருந்து மீண்டதாகச் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இருப்பினும், அல் வலீத் இன்னும் கோமாவிலேயே இருக்கிறார். அவரது உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் தென்படவில்லை.
என்ன நடந்தது?
இளவரசர் கலீத் பின் தலாலின் மகனான இளவரசர் அல் வலீத் கடந்த 2005இல் ஒரு கார் விபத்தில் சிக்கினார். அப்போது கோமாவில் விழுந்த அவருக்கு அதன் பிறகு சுயநினைவு திரும்பவே இல்லை. சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் தான் அவர் கடந்த 20 ஆண்டுகளாக வென்டிலேட்டர் உதவியுடன் இருந்து வருகிறார். அவர் கோமாவில் இருந்து மீண்டு வர வாய்ப்பு குறைவு என்பதால் வென்டிலேட்டர் சிகிச்சையை நிறுத்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இருப்பினும், அதற்கு அவரது காலித் பின் தலால் அல் சவுத் ஒப்புக்கொள்ளவில்லை












Click it and Unblock the Notifications