ஆழ்கடலில் தங்க புதையல்.. அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள்! இது புதுசா இருக்கே!
போர்ட் மார்சுபி: ஆழ்கடலில் மூழ்கிய கப்பலில் தங்க புதையல் இருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால், அள்ள அள்ள குறையாமல் வரும் தங்கம் ஆழ்கடலில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். எதிர்காலத்தில் தங்கம் உற்பத்திக்கு ஆழ்கடல்கள் மிக முக்கிய இடமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்தில் இருக்கும் பபுவா நியூ கினியாவில் உள்ள, லிஹிர் தீவுக்கு அருகில் உள்ள கோனிக்கல் சீமவுண்ட் பகுதியில் கடலுக்கு அடியில் சுமார் 1.2 கி.மீ ஆழத்தில் எரிமலை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். பூமியின் மேற்பரப்பில் இருக்கும் எரிமலைகளை போல இது மிக பிரமாண்டமாக, நெருப்பை கக்கிக்கொண்டு இருக்காது. மாறாக, வெப்பமான சில திரவங்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் சிறிய ஒட்டைகளாக இருக்கும்.

இதற்கு முன்னரும் கடலுக்கு அடியில் எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்கும், லிஹிர் தீவுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட எரிமலைக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. அதாவது, இந்த எரிமலை ஓட்டையிலிருந்து சூடான திரவம் ஒருபுறமும், மறுபுறம் குளிர்ச்சியான மீத்தேன் வாயுவும் வெளியேறுகிறது. இதற்கு முன்னர் கண்டுபிடித்த எரிமலைகளில் இப்படி நடந்தது கிடையாது. இது தொடர்பான தகவல்கள் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியாகியிருக்கிறது.
ஒரே இடத்தில் மிகுந்த வெப்பநிலையும், மிகுந்த குளிரும் இருப்பதால் இங்கு தங்கம் உருவாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது ஆழ்கடலில் இருக்கும் பூமி விரிசல்கள் வழியாக கடல் நீர் உள்ளே போகிறது. இப்படி போகும் நீர், பூமியின் மேக்மா பகுதியை தொடுகிறது. இங்கு சூரியின் மேற்பறப்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே உடனடியாக நீர் 350 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, எரிமலை ஓட்டைகள் வழியாக வெளியேறுகிறது. இப்படி வரும் நீர் மிகுந்த வெப்பமாகவும், அதிக அமிலத்தன்மை கொண்டதாகவும் அதேபோல தங்கம் போன்ற கனிமங்களை கரைக்கும் தன்மையுடனும் இருக்கும்.
இது பாறைகள் வழியாக வரும்போது பாறைகளில் உள்ள தங்கம் போன்ற கனிமங்களை உருக்கி வெளியே கொண்டு வருகிறது. ஆனால் நீர் ஆழ்கடலின் தரை பரப்பை தொடும்போது உடனடியாக 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்ச்சியடைகிறது. இதனால் வெளியே வந்த நீரிலிருக்கும் தங்கம் போன்ற கனிமங்கள் அப்படியே பொடியாக தரையில் படிந்துவிடுகிறது. தங்கம் மட்டுமல்லாது வெள்ளி, இரும்பு, தாமிரம் போன்ற உலோகங்களும் இப்படி படிகின்றன.
இதனை வெளியே கொண்டு வந்து, தங்கத்தை தனியாக பிரித்தெடுக்க ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் வெற்றியடைந்தால் அதிக அளவில் தங்கம் மார்கெட்டுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications