இந்திய ராணுவமே இருக்காது! தேர்தல் வந்ததும் மீண்டும் வம்பிழுக்கும் மாலத்தீவு அதிபர்- இதே வேலையா போச்சு
மாலே: இந்தியா மாற்றும் மாலத்தீவு இடையே மோதல் தொடரும் நிலையில், அங்கிருந்து இரண்டாவது இந்தியப் படைகள் தாயகம் திரும்பியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாக நல்லுறவு இல்லை. மாலத்தீவில் இந்திய ராணுவம் இருக்கும் நிலையில், அவர்கள் வெளியேறியே தீர வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முய்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

முய்சு: இந்தச் சூழலில் தான் மாலத்தீவில் இருந்து இரண்டாவது இந்திய ராணுவ டீம் இப்போது அங்கிருந்து வெளியேறி உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் முதல் குழு மாலத்தீவில் இருந்து வெளியேறிய நிலையில், இப்போது இரண்டாவது குழுவும் வெளியேறி உள்ளனர். ஏப்ரல் 9ஆம் தேதி இரண்டாவது குழு வெளியேறியதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்தார்.
இந்த மாத இறுதியில் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் இதைப் பெரிய விஷயமாக எடுத்துச் செல்ல முய்சு திட்டமிட்டுள்ளார். ஏனென்றால் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் கூட அவர் இதைத் தான் முன்வைத்தார். அதிபரானால் இந்தியப் படைகளை வெளியேற்றுவேன் என்பதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற்றார். இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த விஷயத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.
பேச்சு: முய்சு கட்சி சார்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் தான் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அவர் பேசுகையில், "முதல் குழு ஏற்கனவே நமது நாட்டில் இருந்து வெளியேறிவிட்டது.. இப்போது, ஏப்ரல் 9ஆம் தேதி, இரண்டாவது படைகளும் மாலத்தீவில் இருந்து வெளியேறிவிட்டது. இப்போது கடையாக ஒரு குழு மட்டும் இருக்கிறது. அவர்களும் மே 10 ஆம் தேதிக்கு முன்பே மாலத்தீவை விட்டு வெளியேறுவார்கள்.
இதை எதைக் காட்டுகிறது. நான் எனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். இங்குள்ள அனைத்து வெளிநாட்டு ராணுவமும் மே 10ஆம் தேதிக்கு முன் வெளியேறிவிடுவார்கள். இதுபோல நான் எந்த எந்தவொரு வாக்குறுதியை வழங்கினாலும் அதை நிறைவேற்ற நான் முழுமையாகப் பாடுபடுவேன்" என்று அவர் கூறினார்.
என்ன காரணம்: மாலத்தீவில் மருத்துவ காரணங்களுக்கு உதவியாக இருக்கும் ஹெலிகாப்டர்களை ஆப்ரேட் செய்யவே இந்திய வீரர்கள் அங்கே இருக்கிறார்கள். இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அங்குள்ள இந்திய வீரர்கள் வெளியேறுவார்கள். அதற்குப் பதிலாக ராணுவம் அல்லாத இந்தியா தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கே செல்வார்கள் என்பதே ஒப்பந்தம். ராணுவம் வெளியேறிவிட்டதாக முய்சு கூறினாலும் வேறு இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்துள்ளனரா என்பது குறித்துத் தெளிவுபடுத்தவில்லை.
இந்திய அரசு: மேலும், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகமோ அல்லது இந்தியாவோ அங்கிருந்த இந்திய ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாலத்தீவின் அட்டு மற்றும் லாமு கத்தூ மற்றும் ஹனிமாதூ ஆகிய பகுதிகளில் ஹெலிகாப்டர்களை ஆப்ரேட் செய்ய 88 இந்திய வீரர்கள் அங்கே இருந்தனர். அங்குள்ள இந்தியா ராணுவ மருத்துவர்களின் எண்ணிக்கையும் இதில் அடக்கம். அவர்கள் வெளியேற வேண்டும் என்பதே முய்சுவின் கோரிக்கை.
அதன்படி கடந்த மார்ச் 11ஆம் தேதி அங்கிருந்து முதல் இந்திய குழு வெளியேறியது. அதேபோல அங்கு அட்டுவில் இருந்த பழைய ஹெலிகாப்டருக்குப் பதிலாக புதிய ஹெலிகாப்ட இந்தியா கொடுத்தது.












Click it and Unblock the Notifications