மலேசியாவுக்கு வந்த சோதனை... 22 ஊழியர்களுடன் எண்ணெய் கப்பல் மாயம்
கோலாலம்பூர்: மலேசியா சரக்கு கப்பல் ஒன்று 7.5 மில்லியன் லிட்டர் பெட்ரோலுடன் மாயமாகியுள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அக்கப்பலில் பயணம் செய்த 22 பணியாளர்களின் நிலை என்னவானது என்பது பற்றியும் எவ்வித தகவலும் இல்லை என்பதால் மலேசியா பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.

எம்.டி. ஒர்கிம் ஹார்மோனி என்ற அக்கப்பல் மலாக்காவிலிருந்து குவாண்டனுக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. தொடர்புகள் துண்டிக்கப்பட்ட அந்தக் கப்பலில் இருந்த பெட்ரோலின் எடை 6000 டன்கள் இருக்கும் என்றும், அதன் மதிப்பு 15 மில்லியன் ரிங்கிட் எனவும் மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் செயல் இயக்குனர் இப்ராகிம் முகம்மது கூறியுள்ளார்.
22 ஊழியர்கள் மாயம்
இதில் பணியாற்றி வரும் 22 ஊழியர்களில், 16 பேர் மலேசிய நாட்டை சேர்ந்தவர்களென்றும், ஐவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்களென்றும், ஒருவர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து கப்பலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கப்பலை தேடும் பணியில்
மலேஷிய கடல் பகுதியிலும் இந்தோனேசிய மற்றும் சிங்கப்பூர் கடல் பகுதியிலும் 20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அந்தக் கப்பல் தேடப்பட்டு வருவதாகவும் இப்ராஹிம் கூறியுள்ளார். மலேசியாவில் பதிவான அந்தக் கப்பலைக் காணவில்லை என்ற விவரத்தை சிங்கப்பூர் கடலோர காவல் படையினருக்கும் இந்தோனேசிய அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி இருப்பதாகவும், கப்பலைக் கண்டுபிடிக்க அந்தப் பக்கமாகச் செல்லும் கப்பல்களின் உதவியை நாடியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் கவலை
எண்ணெய் கப்பல் காணாமல் போனது குறித்து அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக் கவலை தெரிவித்துள்ளார். ஜோகூரில் மாயமான எண்ணெய்க் கப்பலைக் கண்டறிய அரசாங்கம் உடனடியாக மீட்புக் குழுவினரை அனுப்பும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பிராத்தனை
"மலேசியாவுக்குச் சொந்தமான அந்தக் கப்பல் மாயமானதை அறிந்து மிகவும் கவலையடைகின்றேன். அதில் இருந்த 22 பணியாளர்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்கின்றேன்" என்று தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் நஜிப் தெரிவித்துள்ளார்.
கடற்கொள்ளையர்கள் கடத்தல்
அந்த எண்ணெய்க் கப்பல் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக அனைத்துலக கடல்துறை வாரியம் தெரிவித்துள்ளது. எண்ணெய் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்படுவது தொடர் நடவடிக்கையாகி வருகிறது. கடந்த மாதம் 4ஆம் தேதி இதேபகுதியில் எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டது. இதேபோல கடந்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களில் மலேசியா அருகே எண்ணெய் கப்பல்கள் கடத்தப்பட்டு அதிலிருந்த பலமில்லியன் லிட்டர் டீசல்கள் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications