நேபாளத்திற்கு எமனாக உள்ள மேலோட்டமான நிலநடுக்கங்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்தியாவில் டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்நிலையில் இன்று மதியம் 12.35 மணிக்கு நேபாளத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரம் அருகே உள்ள நம்சே பஜார் நகரில் இருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து டெல்லி, பீகார், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை அடுத்து நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களுக்கு ஓடிவந்து அங்கேயே நின்று கொண்டுள்ளனர். மேலும் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுகத்தால் விரிசல் அடைந்த கட்டிடங்கள் இன்றைய நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகியுள்ளனர்.
நிலநடுக்கம் ஆழத்தில் ஏற்பட்டால் நில அதிர்வுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆனால் நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆழத்தில் ஏற்படாததால் தான் அடிக்கடி ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.
இன்றைய நிலநடுக்கம் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் இது அபாயகரமானது என்று கூறப்படுகிறது. நிலநடுக்கம் மேலோட்டமாக ஏற்படுவது ஆபத்தானது என்று நிபுணர்கள் கடந்த மாதமே தெரிவித்த நிலையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications