ஏமனில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 'டீல்': பிரச்சனை தீர்கிறது
சனா: ஏமனில் அதிபரை வீட்டுச் சிறையில் வைத்துள்ள ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து இத்தனை நாட்களாக இருக்கும் பிரச்சனை முடிவுக்கு வருகிறது என்று கூறப்படுகிறது.
ஏமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் அரசில் சம அதிகாரம் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் சனாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் அண்மையில் அதிபர் ஆபெத் ரப்பு மன்சூர் ஹாதியை அவரது மாளிகையில் வீட்டுச் சிறை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்தும் இடையே புதன்கிழமை இரவு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாம். இதில் அரசில் கிளர்ச்சியாளர்களுக்கும் அதிகாரம் அளிக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் ஹாதியிடம் எவ்வளவு அதிகாரம், கிளர்ச்சியாளர்களிடம் எவ்வளவு அதிகாரம் இருக்கும் என்ற விவரம் தெரியவில்லை.
நாடாளுமன்றம் மற்றும் மாநில அரசில் கிளர்ச்சியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாம். மேலும் தாங்கள் அண்மையில் சிறை பிடித்த அரசு உயர் அதிகாரி ஒருவரை விடுவிக்க கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்களாம்.
அரசில் சம பங்கு அதிகாரம் கேட்கும் கிளர்ச்சியாளர்களுக்கு நிஜத்தில் மொத்த அதிகாரத்தை தங்கள் வசப்படுத்தி அதிபரை வெறும் அதிகாரமற்ற பொம்மையாக்க விருப்பம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஷியா முஸ்லீம்கள் அதிகாரம் படைத்த ஈரான் ஆதரவு அளிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications