இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே துப்பாக்கி சூடு.. பெண் சாவு, பலர் படுகாயம்.. தீவிரவாதி சுட்டுக்கொலை!
லண்டன்: லண்டனிலுள்ள இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பெண் உயிரிழந்தார்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பேலஸ் ஆப் வெஸ்ட்மின்ஸ்டர் தற்காலிகமாக மூடப்பட்டது. பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டன. இதனிடையே துப்பாக்கியால் சுட்ட நபர், பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் ஒருவரையும் கத்தியால் குத்தியுள்ளார். அந்த நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இருப்பினும் வேறு எந்த தாக்குதல்காரர்களாவது பதுங்கியுள்ளனரா என்பது குறித்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதை தீவிரவாத தாக்குதல் என்றே கருதி விசாரணை செய்து வருவதாக லண்டன் போலீசார் அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மிகுந்த சத்தமும், அலறலும் கேட்டதாகவும், துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், பாராளுமன்றத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் டிவிட் செய்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக, வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியிலுள்ள போக்குவரத்து நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தின் உள்ளே சுமார் 400 எம்.பிக்கள் உள்ளனர். அனைவரும் பத்திரமாக உள்ளதாக லண்டன் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் தெரேசா மே பாதுகாப்பாக உள்ளதாக செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
அதேநேரம், துப்பாக்கி சூடு காரணமாக, பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களை மீட்க ஆம்புலன்சுகளுடன், ஹெலி-ஆம்புலன்ஸ்களும் களமிறக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் அங்கு குவிந்துள்ளனர்.