அயோத்தி ராமர் கோவில் திறப்பு.. கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான்.. என்ன சொல்லியிருக்கு பாருங்க
இஸ்லாமாபாத்: அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. இந்த நிலையில், அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் பெரும்பான்மைவாதத்தை காட்டுவதாக கூறியுள்ளது.
அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதி அளித்தது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டும் பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. மூன்று ஆண்டுகளாக முழு வீச்சில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. இரும்பு பொருட்கள் எதுவும் இன்றி வெறும் கற்களை கொண்டே இந்த கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் வகையில் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது ஆகும். மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களுடன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வழிபாடு: புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலில் 5 வயது பால ராமர் சிலை என்பது கடந்த 18 ம் தேதி நிறுவப்பட்டது. இதையடுத்து இன்று கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு தொடங்கிய பிரான பிரதிஷ்டை சடங்குகள் 12.45 மணி வரை நடந்தது. பிரதமர் முன்னின்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்தார். ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பாலராமர் சிலை முன்பாக கண்களை மூடி மனமுருகி பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
பாகிஸ்தான் கருத்து: பின்னர் ராமர் சிலைக்கு தீப ஆராதனையும் காட்டினார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இந்த நிலையில், அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் பெரும்பான்மைவாதத்தை காட்டுவதாக கூறியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது:-
முஸ்லீம்களை ஓரங்கட்டும் முயற்சி: கடந்த 31 ஆண்டுகளாக நடைபெற்ற தொடர் நிகழ்வுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேக விழா நடபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி இந்தியாவில் அதிகரித்து வரும் பெரும்பான்மைவாதத்தை காட்டுகிறது. இந்தியாவில் அரசியல், பொருளாதார ரீதியாக முஸ்லீம்கள் ஓரங்கட்டப்படுவதற்கான முயற்சிகளின் முகமாக இது அமைந்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் இந்துத்வா சித்தாந்தம் மத நல்லிணகத்திற்கும் பிராந்திய அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. முஸ்லீம்கள் உள்பட சிறுபான்மை மக்களையும் அவர்களின் வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பையும் இந்தியா உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications