யு.எஸ். சிலிக்கான்வேலியில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்துக்கு தடை கோரி சீக்கியர் அமைப்பு வழக்கு!
கலிபோர்னியா: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிலிக்கான்வேலியில் இந்தியர்களிடையே உரையாற்றுகிற பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தில் சீக்கியர் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
ஐக்கிய நாடுகளில் சபையின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். இப் பயணத்தின் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் 12 நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு செல்லும் மோடி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்கை சந்தித்துப் பேசுகிறார். பேஸ்புக் ஊழியர்களுடன் கேள்வி-பதில் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
பின்னர் வரும் 27-ந் தேதி சிலிக்கான்வேலியில் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க இந்தியர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என அமெரிகாவாழ் சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு சார்பில் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள 3 இந்தியர் அமைப்புகளுக்கு கலிபோர்னியா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.