பெஷாவர் வெறியாட்டம்: பாகிஸ்தானில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு
பெஷாவர்: பாகிஸ்தான் பெஷாவர் நகரில் தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்காக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
தலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கொடூரமான மிருகவெறி தாக்குதலை நடத்தி 100க்கும் அதிகமான அப்பாவி குழந்தைகள் உள்பட பல பேரை கொன்று குவித்து வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
தீவிரவாதிகள் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் தேசிய துக்கத்தை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார்.
பெஷாவரில் நிருபர்களிடம் பேசிய அவர், "இந்த நாட்டில் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் வரையில் தீவிரவாதத்துக்கு எதிரான போர் ஓயாது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்" என கூறினார்.
இந்த தாக்குதல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் மற்றும் உலகத் தலைவர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் ஏற்கனவே தாலிபான்களால் சுடப்பட்டு மீண்டு வந்த இளம் மனித உரிமை ஆர்வலரும், உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் சாய் இச்சம்பத்தால் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.