சிங்கப்பூர்: கலவரம் காரணமாக இந்தியர் வாழும் பகுதிகளில் மதுபானம் விற்கத் தடை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் பேருந்தில் சிக்கி பலியானதைத் தொடர்ந்து அங்கு நிலவி வரும் கலவரம் மற்றும் பதட்டமான சூழ்நிலையின் காரணமாக இந்தியர்கள் வாழும் பகுதிகளில் மதுபானம் விற்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சிறிய இந்தியா என்ற பகுதியில் இந்தியர்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹாம்பசையர் சாலையில் பேருந்தில் சிக்கி தமிழரான சக்திவேல் குமார வேலு என்ற தொழிலாளி உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது. 28 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை காரணமாக தமிழர் வாழும் பகுதியில் மதுபானம் விற்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

கலவரம்....
குமாரவேலின் மரணம் கொலை எனக் கூறி, ஆத்திரம் அடைந்த மற்றத் தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இந்தியா, வங்காளதேசம் உள்பட தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்த சுமார் 400 பேர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கைது....
கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. 10 போலீசார் உள்பட 18 பேர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட 24 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 ஆண்டுச் சிறை....
கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிங்கப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனையும், பிரம்படிகளும் வழங்கப்படும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நேரில் ஆய்வு....
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டின் உள்துறை இணையமைச்சர் ஈஸ்வரன், போக்குவரத்து துறையமைச்சர் லுயிடக்யா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மது போதையே காரணம்....
இந்நிலையில், குமாரவேலு மது போதையில் இருந்ததே விபத்திற்கும், அதனைத் தொடர்ந்த கலவரத்துக்கும் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதால், இந்தியர்கள் வாழும் லிட்டில் இந்தியா, ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை நீடிக்கும்...
மதுபான விற்பனைத் இன்னும் சில நாட்கள் அமலில் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications