ஆப்கனில் 6 தாலிபன் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக குற்றங்கள் இழைத்த தாலிபன் தீவிரவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே மிக நீண்டகாலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக அஷ்ரப் கனி கடந்த 2014ம் ஆண்டு பதவி ஏற்றார். அதன்பின் முதன்முறையாக இன்று தாலிபன் தீவிரவாதிகள் 6 பேர் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பின்படி, குடிமக்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எதிராக குற்றங்கள் இழைத்த தீவிரவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனை வழங்க கனி ஒப்புதல் வழங்கி விட்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் காபூல் நகரின் மைய பகுதியிலான பாதுகாப்பு சேவை மையத்தின் மீது நடந்த தலீபான் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2001ம் ஆண்டிற்கு பின் நடந்த மிக கொடூர தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தாலிபன்களுக்கு எதிராக ராணுவம் கடுமையாக செயல்படும் என அஷ்ரப் கனி சபதம் எடுத்தார். மேலும், குற்றவாளிகளான தீவிரவாதிகளுக்கு மரண தண்டனைகள் உள்ளிட்ட சட்டபூர்வ தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications