திருடன் போலீஸ் ஆடுகையில் தம்பியை நிஜத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 6 வயது சிறுவன்
நியூயார்க்: அமெரிக்காவில் திருடன் போலீஸ் விளையாடுகையில் 6 வயது சிறுவன் நிஜத் துப்பாக்கியால் தனது 3 வயது தம்பியை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரைச் சேர்ந்தவர் மைக்கேல் சான்டியாகோ(25). ரவுடிக் கும்பலில் இருந்த அவர் தற்போது உணவகம் ஒன்றின் மேனேஜராக உள்ளார். அவருக்கு 6 மற்றும் 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். மைக்கேல் தனது வீட்டில் துப்பாக்கியில் தோட்டா போட்டு அதை ஒரு துணியில் சுத்தி ப்ரிட்ஜ் மீது வைத்துள்ளார்.

தான் துப்பாக்கியை பாதுகாப்பிற்காக வைத்துள்ளதாகவும், அதை ப்ரிட்ஜ் மீது வைத்துள்ளதாகவும் மைக்கேல் தனது மூத்த மகனிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் சிறுவர்கள் திருடன் போலீஸ் ஆட்டம் ஆடியுள்ளனர்.
அப்போது 6 வயது சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து தம்பியை நோக்கி சுட்டான். இதில் குண்டடிபட்டு சிறுவன் பலியானார். இதையடுத்து போலீசார் மைக்கேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் குக் கவுன்ட்டி நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் பிரவுன் கூறுகையில்,
மைக்கேல் வேண்டும் என்றே வீட்டில் துப்பாக்கி இருக்கும் இடத்தை குழந்தையிடம் தெரிவித்திருக்க மாட்டார். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. தேவையில்லாதவர்களிடம் துப்பாகி இருந்தால் இப்படி தான் நடக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications