யு.எஸ்.ஸில் விமான விபத்து: கூடைப்பந்து போட்டியை பார்த்துவிட்டு திரும்பிய 7 பேர் பலி
இலினாய்ஸ்: அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 7 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் இன்டியானாபோலிஸில் நடந்த என்.சி.சி.ஏ. ஆண்கள் கூடைப்படந்து சாம்பியன்ஷிப் போட்டிகளை காண செஸ்னா 414 என்ற சிறிய ரக விமானத்தில் சென்றனர். திங்கட்கிழமை இரவு நடந்த போட்டியை பார்த்த அவர்கள் அன்றே தங்களின் வீடுகளுக்கு விமானம் மூலம் கிளம்பினர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானம் இலியான்ஸில் உள்ள ப்ளூமிங்கடன் அருகே விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் பலியாகினர்.
பலியானவர்களில் இலினாய்ஸ் மாநில பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்து அணியின் பயிற்சியாளர் ரோரி வார்ட் மற்றும் விளையாட்டுத் துறை துணை தலைவர் ஆரன் லீட்ச் ஆகியோர் அடக்கம். அவர்கள் இருவரும் பலியானதை இலினாய்ஸ் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
விமானத்தில் 5 பேர் இருந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் விமானத்தில் 7 பேர் இருந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதிகாலை 3.15 மணிக்கு மீட்பு பணியினர் விமானம் விழுந்த இடத்தை அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications