சோமாலியா அதிபர் மாளிகை மீது அல்-சபாப் தீவிரவாதிகள் தாக்குதல்!
மொகடிசு: சோமாலியா அதிபர் மாளிகை மீது அல்-சபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதிபர் மாளிகையின் சுற்றுச் சுவரினை தகர்த்து இத்தாக்குதலை நடத்தி உள்ளனர். அதிக பாதுகாப்பு மிக்க அதிபர் மாளிகையை தீவிரவாதிகள் தாக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அல் சபாப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால், தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது.
தாக்குதல் நடைபெற்ற போது அதிபர் ஹாசன் ஷேக் முகமது மாளிகையில் இல்லாத காரணத்தினால் உயிர் தப்பி உள்ளார்.
அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-சபாப் ரம்ஜான் மாதத்தில் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தி வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று இதேபோன்று அந்நாட்டு நாடாளுமன்றம் அருகில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.
இந்த முறை குண்டுகள் நிரப்பிய காரில் வந்த போராளிகள் அதிபர் மாளிகையின் சுற்றுச்சுவரில் காரை கொண்டு மோதித் தகர்த்துள்ளனர். ஆனால், அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த ராணுவப் படையினர் காரில் வந்த தீவிரவாதிகள் ஐந்து பேரில் மூவரை சுட்டுக்கொன்று அதிபர் மாளிகைக்கு ஆபத்து நேராமல் தடுத்துவிட்டனர்.
மீதமுள்ள இருவர் சுற்றுச்சுவரில் கார் மோதிய போது நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சரான அப்துல்லாஹி கோடா பாரே கூறியுள்ளார்.