தென் கொரிய படகு விபத்து- பலியான 250 மாணவர் குடும்பங்களுக்கு ரூ.2.36 கோடி இழப்பீடு
சியோல்: தென் கொரிய படகு விபத்தில் பலியான சுமார் 250 மாணவ, மாணவியரின் குடும்பங்களுக்கு தலா 420 மில்லியன் வான்களை நிவாரணமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூபாய் 2.36 கோடி ஆகும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி, தென் கொரியாவின் ஆன்சன் பகுதியில் உள்ள டான்வோன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 323 மாணவர்கள் ஜேஜு தீவுக்கு செவோல் என்ற படகில் விடுமுறை சுற்றுலா சென்றனர்.

அப்போது அந்த படகில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக 476 பேர் பயணித்ததால் நீரில் மூழ்கி அந்தப் படகு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சுமார் 250 மாணவ-மாணவியர் உள்பட பலர் பலியாகினர். இந்த விபத்து நடைபெற்று ஓராண்டு நெருங்கும் நிலயில் நீரில் மூழ்கி பலியான மற்றும் காணாமல் போனதாக கருதப்படும் நபர்களுக்கு தென் கொரிய அரசு நிவாரணத் தொகையை இன்று அறிவித்துள்ளது.
பலியான மாணவ-மாணவியர்களின் குடும்பங்களுக்கு தலா 420 மில்லியன் வான் (மூன்று லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) அதாவது, இந்திய மதிப்புக்கு சுமார் 2 கோடியே 36 லட்ச ரூபாய், மற்றும் பலியான ஆசிரியர்களுக்கு அவர்களின் வருமானத்தை கணக்கில் கொண்டு 760 மில்லியன் வான் (ஒரு மில்லியன் வான் என்பது இந்திய மதிப்புக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய்) நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலியான இதர பயணிகள் அனைவருக்கும் அவரவர் வயது மற்றும் உயிருடன் இருந்த காலத்தில் சம்பாதித்த வருவாய்க்கு தக்கபடி 150 மில்லியன் வான் முதல் 600 மில்லியன் வான் வரை இழப்பீடாக வழங்கப்படும் எனவும் தென் கொரிய கடல்சார் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications