தெற்கு சூடான்: தீவிரவாதிகள் தாக்குதலில் இந்திய அமைதிப்படை வீரர்கள் மூவர் பலி
ஜூபா: தெற்கு சூடானில் ஐ.நா. அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் மூன்று இந்திய அமைதிப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் தலைநகரில் கடந்த ஞாயிறன்று இரவு திடீரென கலகம் ஏற்பட்டது. முன்னாள் துணை அதிபர் ரிக் மச்சரின் ஆதரவு ராணுவ வீரர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் சால்வா கீருக்கு எதிராக நடந்த இந்த கலகம் 2 நாட்களில் முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ராணுவப் புரட்சியின் போது 400 முதல் 500 பேர் வரை பலியாகி இருப்பதாக ஐ.நா. அறிவித்துள்ளது.
புரட்சியில் ஈடுபட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் கோஸ்டி மானிப், முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஜான் லக் ஜோக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஜியர் சங் அலங் உள்பட 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தஞ்சம்
தலைநகர் ஜுபாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவ புரட்சியின் விளைவாக சுமார் 20 ஆயிரம் பேர் ஜுபாவில் உள்ள ஐ.நா.வளாகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
முன்னாள் துணை அதிபர் ரிக் மச்சரின் ஆதரவு கலகக்காரர்கள் தலைநகர் ஜுபாவிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஜாங்லீ மாநிலத்தின் தலைநகரான போர் நகரத்தை கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டது.
ஐ.நா அலுவலகம் தாக்குதல்
இந்நிலையில், தெற்கு சூடானில் உள்ள ஜொங்கோலி மாநிலத்தின் அபோக்கோ நகரில் ஐ.நா. அலுவலகத்தின் மீது சுமார் 2 ஆயிரம் நுவர் இன தீவிரவாதிகள் இன்று அதிரடி தாக்குதல் நடத்தினர்.
பயங்கர ஆயுதங்களுடன் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், உள்ளே இருந்த சர்வதேச அமைதிப்படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.
இந்திய அமைதிப்படையினர்
தாக்குதல் நடந்தபோது இந்தியாவை சேர்ந்த 43 அமைதிப்படையினர் அலுவலகத்தின் உள்ளே இருந்தனர். ஜுபாவில் உள்ள ஐ.நா. வளாகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளது போல் போக்கோ நகரின் ஐ.நா. அலுவலகத்திலும் தீவிரவாதிகளுக்கு பயந்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்களை கொல்லும் நோக்கத்தில் தீவிரவாதிகள் இன்று நடத்திய ஆவேச தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 3 அமைதிப்படையினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சூடான் ராணுவ வீரர்கள்
சூடான் ராணுவத்தை சேர்ந்த பலரும் பலியாகினர். படுகாயமடைந்த பலர் பல்வேறு ஆஸ்பத்திரிகளின் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த தாக்குதலுக்கு ஐ.நா தலைமை அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications