ஸ்பெயினில் குழந்தையை பலாத்காரம் செய்த 4 பாதிரியார்கள் கைது
மாட்ரிட்: ஸ்பெயினில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 4 பாதிரியார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேவாலயங்களில் பணிபுரிபவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடக் கூடாது என்பதில் போப் பிரான்சிஸ் கண்டிப்பாக உள்ளார். இந்நிலையில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவர் போப்புக்கு கடிதம் எழுதி பாதிரியார்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஸ்பெயினின் கிரனாடாவில் பாதிரியார்கள் குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ளார்களா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கிரனாடாவைச் சேர்ந்த 4 பாதிரியார்களை குழந்தையை பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் யார் என்பதை தெரிவித்த போலீசார் மறுத்துவிட்டனர்.
இது குறித்து ஸ்பெயின் உள்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் டயஸ் கூறுகையில்,
இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர போப் பிரான்சிஸ் தான் சிறப்பு அக்கறை காட்டினார். போலீசார் 4 பாதிரியார்களை கைது செய்துள்ளனர் என்றார்.
போப் பிரான்சிஸ் தனக்கு கடிதம் எழுதிய அந்த நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக ஸ்பெயின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் போப் போன் செய்ததை வாட்டிகன் செய்தித் தொடர்பாளர் ப்ரெட்ரிகோ லம்பார்டி உறுதிபடுத்த மறுத்துவிட்டார்.
பாதிக்கப்பட்ட நபர் கிரனாடா ஆர்ச்பிஷப்புக்கு கடிதம் எழுதியதாகவும், அவர் அந்த நபரை நேரில் சந்தித்து பேசியதாக அவர் கோப் ரேடியோவுக்கு பேட்டியளித்ததாக லம்பார்ட் தெரிவித்தார்.
கிரனாடாவில் பல பாதிரியார்களை கடந்த வாரம் சஸ்பெண்ட் செயத்தாக பிஷப் அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பலாத்கார சம்பவம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாம்.