மதங்களை இழிவுபடுத்துவதை தடுக்க இலங்கையில் வருகிறது புதிய சட்டம்: அமைச்சர் உறுதி
கொழும்பு: இலங்கையில் மதங்களை இழிவுபடுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அந்நாட்டின் புத்தசாசன, மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் பவுத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடிகை நடாஷா எதிரிசூரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து நடாஷா எதிரிசூரிய மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் இலங்கையை விட்டு தப்பி செல்வதற்காக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற நிலையில் நடாஷா எதிரிசூரியா கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
மேலும் ஜப்பான் பவுத்த விகாரை ஒன்றில் மாககல்கந்தே தேரர் என்பவர் இளைஞர் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் பவுத்த விகாரைகள் அமைப்பதாக கூறி பலநாடுகளில் பண மோசடியிலும் மாககல்கந்தே தேரர் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை புத்தசாசன, மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, எந்த ஒரு மதத்தையும் யாரும் இழிவுபடுத்த அனுமதிக்க முடியாது. மத சுதந்திரம் என்ற பெயரில் இத்தகைய செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நடாஷா எதிரிசூரியா, பவுத்த மத அமைச்சகத்தின் தலையீட்டால்தான் கைது செய்யப்பட்டார். பொதுவாக பவுத்த மதத்தை இழிவுபடுத்தும் போக்குகளை நாங்கள் தடுப்பது இல்லை என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நடாஷா விவகாரத்தில் உடனே நடவடிக்கை எடுத்தோம் என்பதை அவர்கள் மறந்தும் விடுகின்றனர்.

பாலியல் சர்ச்சையில் பவுத்த தேரர்கள்: இலங்கையில் மதங்களை விமர்சித்து, மதம் சார்ந்தவற்றை திரிபுபடுத்தி பேசுவதை தடுக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவர முயற்சித்து கொண்டிருக்கிறோம். பவுத்த சாசனத்தை அவமதிக்கும் தேரர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பவுத்த மகா சங்கத்தினருடன் ஆலோசித்து தேரர்களாக இருக்க வயது வரம்பு நிர்ணயிப்பது குறித்தும் நடவடிக்கை எடுப்போம். பவுத்த தேரர்கள் சிலரது ஒழுங்கீனங்களை ஏற்கவே முடியாது. இப்படியான நபர்களை தேரர்களாக தொடர்ந்து வைத்திருக்கவும் முடியாது என்றார். நடாஷா விவகாரம் தொடங்கியது முதலே புத்த சாசன, மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இத்தகைய சட்டம் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி கருத்து தெரிவித்து வருகிறார்.
தமிழர் தரப்பு கருத்து: இன்னொரு பக்கம், தொல்பொருள் துறை ஆய்வு விவகாரத்தில் இதே அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தமிழர்களுக்கு எதிராக செயல்பட அதிகாரிகளை தூண்டுகிறார்; தமிழர் நிலங்களை பறிப்பதற்கு பின்னணியில் இருக்கிறார்; ஆகையால் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மீது நடவடிக்கை எடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தியும் வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பி சுமந்திரனும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications