இலங்கை ஜனாதிபதி தேர்தல்: 4-வது இடத்துக்கு முன்னேறிய ஈழத் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன்!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஈழத் தமிழரின் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். தபால் ஓட்டுகளில் தொடக்கத்தில் 4-வது இடத்தில் இருந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே, தமிழர் மாவட்ட வாக்குகள் எண்ணிக்கைக்குப் பிறகு 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இதனையடுத்து நேற்று இரவு 9 மணி அளவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் தென்னிலங்கையான சிங்களர் பகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசநாயக்க முன்னிலையில் இருந்து வருகிறார். தொடக்கத்தில் சற்று நேரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2-வது இடம் பெற்றிருந்தார். ரணில் விக்கிரமசிங்கேவுக்கு 3-வது இடமும் நாமல் ராஜபக்சேவுக்கு 4-வது இடமும் கிடைத்தது. ஈழத் தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் 5-வது இடத்தில் இருந்தார்.

ஆனால் ஈழத் தமிழர்களின் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அடுத்தடுத்து வெளியான போது முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. 60%-க்கும் மேல் முன்னிலை பெற்றிருந்த அனுர குமார திசநாயக்கவின் வாக்கு சதவீதம் குறைந்தது. ஆனாலும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். ரணில் விக்கிரமசிங்கே 2-வது இடத்துக்கும் சஜித் பிரேமதாச 3-வது இடத்துக்கும் மாறினர். அதேபோல ஈழத் தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் 4-வது இடத்துக்கு முன்னேறினார். மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரியநேந்திரனுக்கு மிக அதிகமான வாக்குகள் கிடைத்து முதலிடம் பெற்றார். வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலையில் அரியநேந்திரனுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன.












Click it and Unblock the Notifications