20 மில்லியன் மக்கள் பட்டினி, நோயால் அவதி... உதவி கோரி உலக நாடுகளுக்கு ஐநா கோரிக்கை!
நியூயார்க்(யு.எஸ்) ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநலத் தலைவர் ஸ்டீபன் ஓப்ரையன் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சோமாலியா, தெற்கு சூடான், கென்யா மற்றும் ஏமன் நாடுகளில் 20 மில்லியன் மக்கள் உணவு இல்லாமல் பட்டினி கிடக்கின்றனர். அவர்கள் பசியில் இறந்து போகக்கூடும்.
மேலும் சுகாதாரக்குறைவு மற்றும் பட்டினியால் நோய்வாய்ப்பட்டும் இறக்க நேரிடும். ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட 1945ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலும் இல்லாத அளவுக்கு, மனிதகுலத்திற்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வரலாற்றில் மிகவும் இக்காட்டான காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம். மனித குலத்திற்கு மிகவும் நெருக்கடியான நேரம் இது.
உலக நாடுகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சி இல்லாவிட்டால், 20 மில்லியன் மக்களும் பசி, பட்டினி, நோயால் இறந்து போவதைத் தடுக்க இயலாது என்று ஓ ப்ரையன் கூறியுள்ளார்.
மேலே கூறப்பட்டுள்ள நான்கு நாடுகளில் சோமாலியா மற்றும் ஏமன் நாட்டு குடிமக்களுக்கு. அமெரிக்கா செல்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் அமெரிக்காவுக்கு மட்டுமே தலைவர், உலக நாடுகளுக்கு அல்ல என்று ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கைக்கு அமெரிக்கா எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரியவில்லை.
அமெரிக்கா முயற்சியை முன் எடுக்காவிட்டால், இங்கிலாத்து, ரஷ்யா,, ஃப்ரான்ஸ் சீனா உள்ளிட்ட ஏனைய நிரந்தர உறுப்பு நாடுகளின் நிலைப்பாடும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
- இர தினகர்












Click it and Unblock the Notifications