சிரியாவில் விமானத் தாக்குதல்: பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
பெய்ரூட்: சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஹாஸ் கிராமத்தின் மீது புதன்கிழமை காலை நடைபெற்ற வான் வழித் தாக்குதலுக்கு 7 பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாகினர்.
சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின் படைகள் இணைந்து அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தொடர் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்திலும் கடந்த சில தினங்களாக தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.இதனிடையே இட்லிப் மாகாணத்தின் ஹாஸ் கிராமத்தின் மீது நேற்று காலை 11.30 மணி அளவில் நடைபெற்ற விமானத் தாக்குதலில் 7 பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலை நடத்தியது ரஷிய படைகளா? இல்லை சிரிய படைகளா? என்பது இப்போதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
தாக்குதல் தொடங்கியதும் பாதுகாப்பாக மாணவர்கள் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றபோது ராக்கெட் குண்டு ஒன்று பள்ளி மீது வீசப்பட்டதில், மாணவர்கள் பலியாகி உள்ளனர். காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த விமான தாக்குதல் தொடர்ந்து ஆறு முறை நடைபெற்றதாக அங்குள்ள மனித உரிமை கண்காணிப்பகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது