இந்திய மதிப்பில் இவ்வளவு கோடியா? ஒரு கப்பலால் வந்த வினை.. சூயஸ் கால்வாய் அடைப்பால் பெரும் இழப்பு!
எகிப்து: சூயஸ் கால்வாயில் ஏற்பட்டு இருந்த அடைப்பு காரணமாக உலகம் முழுக்க பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சூயஸ் கால்வாயில் தரைதட்டி இருந்த எவர் கிவன் கப்பல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு முன் புயலில் தரைதட்டிய கப்பல் பெரிய போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சரக்கு கப்பல் மீட்கப்பட்டாலும் இன்னும் அங்கு முழுமையாக போக்குவரத்து தொடங்கவில்லை. சீரமைப்பு பணிகளுக்கு பின் வரிசையாக ஒவ்வொரு சரக்கு கப்பலாக இங்கு செல்ல அனுமதிக்கப்படும்.
எவர் கிரீன்.. சூயஸ் கால்வாய் அடைக்கப்பட்ட அதே நேரத்தில்.. சீனாவில் நடந்த "சம்பவம்".. ஏதோ இடிக்குதே!
கடல் வழி போக்குவரத்து
உலகின் கடல் வழியான சரக்கு போக்குவரத்தில் 12% போக்குவரத்து சூயஸ் கால்வாய் வழியே மட்டும்தான் நடக்கிறது. அதேபோல் உலகின் 8% திரவ இயற்கை எரிவாயு இதே வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பிரச்சனை காரணமாக சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு மட்டும் தினமும் 15 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சூயஸ் கால்வாய்
இந்த சூயஸ் கால்வாய்தான் எகிப்தின் ஜிடிபியில் 2% பங்களிப்பை கொடுக்கிறது. அதிலும் இந்த ஒருவாரத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக தினமும் 9.6 பில்லியன் வர்த்தகம் தினமும் நடக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 3.3 மில்லியன் டன் கார்கோ இங்கே செல்ல வேண்டும். அது மொத்தமாக தடை பட்டுள்ளது.
ஒவ்வொரு நிமிடம்
இங்கு கப்பல் தரை தட்டிய ஒவ்வொரு நிமிடமும் மில்லியன் டாலர் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 5 நாட்கள் இந்த கப்பல் தரை தட்டி இருந்தது. அந்த 5 நாட்களில் உலகம் முழுக்க இறக்குமதி, ஏற்றுமதி மொத்தமாக பாதிக்கப்பட்டது. உலக வர்த்தகத்தில் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்ட இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இழப்பு
மொத்தத்தில் 72000 கோடி ரூபாய் இதுவரை சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் என்கிறார்கள் . உலக வர்த்தகத்தில் ஒரே வாரத்தில் 0.4% இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை விண்ணை தொடும் என்கிறார்கள் .
விலைவாசி உயரும்
இந்த இழப்பை சரிசெய்ய இன்னும் விலைவாசி உயரும் என்று கூறப்படுகிறது. ஏற்றுமதி மட்டுமின்றி மருந்து துறை, உணவு துறை, பாதுகாப்பு துறை என்று பல துறைகளில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளில் இதனால் கடுமையான இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.