ஏமனில் ராணுவத்தில் சேர வந்த இளைஞர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி
ஏடன்: ஏமனில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 4 பேர் பலியாகினர், 10 பேர் காயம் அடைந்தனர்.
ஏமனின் துறைமுக நகரான ஏடனில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு அருகே ராணுவ சோதனைச்சாவடி உள்ளது. அந்த சோதனைச் சாவடி அருகே உள்ள பேருந்து நிலையத்தில் ராணுவத்தில் சேர வந்த இளைஞர்கள் பேருந்திற்காக இன்று காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகினர், 10 பேர் காயம் அடைந்தனர். தற்கொலைப்படை தீவிரவாதியும் பலியானார்.
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில்,
ராணுவத்தில் சேர வந்த இளைஞர்களை குறி வைத்து தான் அந்த நபர் தாக்குதல் நடத்தினார் என்றார்.