சீனர்கள் தான் டார்கெட்.. பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதல்.. 6 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தசு என்ற இடத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் அடிக்கடி நடக்கும்.. அங்கே குண்டுவெடிப்பு சம்பவங்கள் கூட பல முறை நடந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகள் வலுவாக இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

அப்படியொரு ஷாக் தாக்குதல் தான் மீண்டும் பாகிஸ்தான் நாட்டில் இப்போது நடந்துள்ளது. சீன நாட்டவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்: வடமேற்கு பாகிஸ்தானில் இன்று நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலைப் பாகிஸ்தானைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தசு என்ற இடத்தில் பால கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இதைச் சீன நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வந்த நிலையில், சீன பொறியாளர்கள் பலரும் அந்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் சிலர் இஸ்லாமாபாத்தில் இருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தசு என்ற இடத்திற்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தனர்.
தாக்குதல்: அப்போது தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தைக் கொண்டு அவர்களது காரில் மோதியதாக அம்மாகாண காவல்துறைத் தலைவர் முகமது அலி கந்தாபூர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் காரில் பயணித்த சீனாவைச் சேர்ந்த ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த முகமது அலி கந்தாபூர், அவர்களுடன் சென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஓட்டுநரும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த கைபர் பக்துன்க்வா போலீசார் விசாரணையைத் தொடங்கினர். வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிய கார்களுக்கு பின்னால் சென்ற மற்ற கார்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அம்மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்தச் சம்பவம் குறித்து சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் கூறவில்லை.
தசு என் இடத்தில் தான் மிகப் பெரிய அணையைப் பாகிஸ்தான் கட்டி வருகிறது. ஆனால், இதற்கு உள்ளூரில் எதிர்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே கடந்த காலங்களில் கூட இங்கே கட்டுமானம் மேற்கொள்பவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் பஸ் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 9 சீனர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications