ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் பயங்கர தற்கொலைப்படை தாக்குதல்... 26 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டின் ராணுவ படைகளுக்கும் எதிராக தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. ராணுவத்திற்கு எதிராகவும், பொதுமக்களை குறிவைத்தும் தலிபான் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கஸ்னி பகுதியில் ராணுவ தளம் உள்ளது. இன்று அந்த ராணுவ தளத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் சிக்கி 26 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கஸ்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மொத்தம் 26 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 17 பேர் காயம் அடைந்ததாகவும் கஸ்னி மருத்துவமனை இயக்குனர் பாஸ் முகமது ஹேமத் தெரிவித்தார்.