காஷ்மீரை பறிக்க நினைக்கும் பாக்.,கின் கனவு பலிக்காது - சுஷ்மா சுவராஜ் கடும் தாக்கு
நியூயார்க்: காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பறிக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு பலிக்காது என ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசினார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஐநா சபையின் 71-வது பொதுச்சபை கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் உரையாற்றினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் 71வது பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

இந்த கூட்டத் தொடரில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டு இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், யோகா கலையை கவுரவிக்கும் வகையில் சர்வதேச யோகா தினத்தை ஐ.நா.சபையை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது. நாம் அனைவரும் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க போராட வேண்டும். இதற்கு சில நாடுகள் ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களை கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு உலக வரைப்படத்தில் இடமில்லை.
இந்தியாவில் பதான் கோட் தாக்குதல், யூரி ராணுவ முகாம் தாக்குதல் உட்பட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் இந்தியா பல நிபந்தனைகளை விதிப்பதாக அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஐ.நா., சபையில் பேசி உள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார். அதை ஏற்க முடியாது. என்ன நிபந்தனைகள் என்பதை அவர்தான் கூற வேண்டும்.
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான். எப்பொழுதும் அப்படித்தான் இருக்கும். பயங்கரவாத கருத்துக்களை விதைப்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாத்திற்கு பகதூர் அலி ஒரு உதாரணம். கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் மற்றவர்கள் மீது கல்லெறியக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications