இந்தியாவில் சீனா ரூ.1.20 லட்சம் கோடி முதலீடு! சீன அதிபரை சந்தித்த பிறகு சுஷ்மா சுவராஜ் தகவல்
பெய்ஜிங்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சீனாவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். அவர், அதிபர் ஜி ஜிங்பிங் உடன், இரு நாடுகளின் பரஸ்பர நல்லுறவு திட்டங்கள் குறித்து பேசினார்.
இதன்பிறகு சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: கடந்த ஆண்டு இந்தியா வந்து, பிரதமர் மோடியை சந்தித்த பின், இந்தியா - சீனா இடையேயான உறவு, புதிய நிலையை எட்டியுள்ளது என, ஜி ஜிங்பிங் தெரிவித்தார்.
இதன் காரணமாக, இந்தாண்டு, இந்தியா - சீனா நாடுகளின் பரஸ்பர வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என, அவர் நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளும் மேற்கொண்ட பல்வேறு ஒப்பந்தங்கள், செயல்வடிவம் பெற்று வருகின்றன. அவற்றில் ஒன்றான, புதிய பாதையில், சிக்கிம் வழியாக திபெத்தில் உள்ள கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை செல்லும் திட்டம், வரும் ஜூன் மாதம் செயல்பாட்டிற்கு வரும்.

இது, ஜி ஜிங்பிங் இந்தியா வந்தபோது, பிரதமர் மோடிக்கு அளித்த உறுதிமொழியாகும். இதன் மூலம் ஏராளமான இந்தியர்கள், மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளலாம். டெல்லி வந்த போது, பிரதமர், ஜனாதிபதி, இந்திய மக்கள் ஆகியோர் காட்டிய அன்பையும், விருந்தோம்பலையும், குறிப்பாக, மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு மேற்கொண்ட பயணமும், மறக்க முடியாதது என, ஜி ஜிங்பிங் தெரிவித்தார்.
சீனாவில், இம்மாத இறுதியில் துவங்கும் சந்திர ஆண்டு, ஆட்டின் மீது வருவதால், உருவாக்கம், கண்டுபிடிப்பு போன்ற துறைகள் செழித்து வளர்ச்சி காணும் என, எனக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில், இரு தொழிற் பூங்காக்கள் அமைத்தல், ரயில்வே துறையை நவீனமாக்குதல் உள்ளிட்ட திட்டங்களில், சீனா, 1.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இத்துடன், இதர ஒப்பந்தங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தேன். இவ்வாறு, சுஷ்மா கூறினார். சீன அதிபர் ஒருவர், வெளிநாட்டு அமைச்சர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது, இதுவே முதன்முறை.












Click it and Unblock the Notifications