இருநாள் பயணமாக இன்று சிங்கப்பூர் வருகிறார் சுஷ்மா சுவராஜ்
சிங்கப்பூர்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை இன்று துவங்குகிறார்.
இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று டெல்லியில் இருந்து சிங்கப்பூர் வருகிறார்.
இங்கு அவர், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.சண்முகம் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
இரு நாட்கள் சிங்கப்பூரில் இருக்கும் சுஷ்மாவின் பயணத்தின் முக்கிய நோக்கம், இரு நாட்டு வர்த்தக ஒத்துழைப்புகளை அதிகரிப்பதாகும்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் அடுத்தடுத்து சிங்கப்பூர் பயணம் வர உள்ளனர்.
தங்கள் மாநில தொழில் மற்றும் வர்த்தக உறவுகளை சிங்கப்பூருடன் அதிகரித்துக்கொள்ள இம்முதல்வர்கள் சிங்கப்பூர் வருகிறார்கள். தமிழகத்தையும் சிங்கப்பூர் ஆக்குவோம் என்று தேர்தலுக்கு தேர்தல் பலரும் வாக்குறுதிகள் கொடுக்கிறார்கள்.
சிங்கப்பூரின் பெருமைதான் இத்தனை முதல்வர்களையும், இங்கு இழுக்க செய்கிறது என்றால் அதுமிகையில்லை.