ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சுவீடனில் இணையும் தமிழ் சொந்தங்கள்!
சுவீடன்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சுவீடனில் வாழும் தமிழர்கள் நாளை பேரணி நடத்த உள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் போராட துவங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாக தற்போது நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்கு உணர்வுப் பூர்வமாக சுவீடனில் வாழும் தமிழர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சுவீடன் தமிழ் சொந்தங்கள் நாளை காலை 10.45 மணியளவில் "பிருன்ஸ்பர்க்" சதுக்கத்தில் ஒன்று கூடுகின்றனர். பின்னர் அங்கிருந்து அமைதிப் பேரணியாக "கோட்டாப்ளட்சென் கலாச்சார மையம்" நோக்கி பேரணியாக செல்கின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தங்களது கலாச்சார உணர்வை தமிழக மக்களுக்கு தெரிவிப்பதற்காக இந்த பேரணி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.