புத்தாண்டில் பறிபோன உயிர்கள்.. சுவிட்சர்லாந்து தீ விபத்தில் அதிகரித்த பலி எண்ணிக்கை! 5 நாள் துக்கம்
பெர்ன்: சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, அந்த நாட்டை முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 47 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தையடுத்து, நாட்டில் 5 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மான்டனா என்ற புகழ்பெற்ற சுற்றுலா பகுதியிலுள்ள 'லீ கான்ஸ்டலேஷன்' என்ற இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அங்கு கூடி இருந்தனர்.

அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் முதலில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீ மிக வேகமாக பரவியதால் பலரும் வெளியேற முடியாமல் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் பலர் பெரும் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் பின்னர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மற்றவர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க அவசர சேவைகள், தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர்கள் பெரிய அளவில் ஈடுபட்டன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அண்டை நாடுகளான இத்தாலி மற்றும் ஜெர்மனி மருத்துவமனைகளுக்கும் மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடக்க தகவல்படி, விடுதியின் மேற்கூரை பகுதியை தீ வேகமாகப் பற்றியதே பேரழிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின், இந்த விபத்தை நாட்டில் நடந்த மிகக் கவலைக்கிடமான சம்பவமாக அறிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் 5 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் அரசாங்க கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் தேசியக் கொடி இறக்கிப் பறக்கவிடப்படும் எனவும், அதே நேரத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சுற்றுலா பகுதிகளில் தீ பாதுகாப்பு விதிமுறைகள் சரிபார்க்கப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.













Click it and Unblock the Notifications