சிட்னி தாக்குதல்: தீவிரவாதியின் மனநிலை குறித்து ஆஸ்திரேலியாவை பலமுறை எச்சரித்த ஈரான்
சிட்னி: மான் ஹாரூன் மோனிஸின் மனநிலை பற்றி ஈரான் ஆஸ்திரேலிய அதிகாரிகளை பலமுறை எச்சரித்துள்ளது என ஈரான் நாட்டு பத்திரிக்கையாளர் சாதிக் குர்பானி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லின்ட் கபே ஹோட்டலுக்குள் நேற்று காலை புகுந்த தீவிரவாதி அங்கிருந்தவர்களை பிணையக் கைதியாக பிடித்துக் கொண்டார். பிணையக் கைதிகளில் 5 பேர் தப்பியோடி வந்தனர். ஹோட்டலுக்குள்ளும், நகரிலும் நான்கு வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக தீவிரவாதி தெரிவித்தார். அவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து 16 மணிநேரம் கழித்து ஆஸ்திரேலிய கமாண்டோக்கள் ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 2 இந்தியர்கள் உள்பட 11 பேரை மீட்டனர். இந்த தாக்குதலில் 2 பிணையக் கைதிகள் மற்றும் மோனிஸ் பலியானார்.
இந்நிலையில் இது குறித்து ஈரானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சாதிக் குர்பானி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சிட்னி முற்றுகை சம்பவத்திற்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தெஹ்ரான் மோனிஸின் மனநிலை பற்றி ஆஸ்திரேலிய அதிகாரிகளை பலமுறை எச்சரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் பிறந்த மோனிஸ் 1996ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்துள்ளார். அவர் போரில் பலியான ஆஸ்திரேலிய வீரர்களின் குடும்பத்தாருக்கு துவேஷ கடிதங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications