எங்களிடம் 4 வெடிகுண்டுகள் இருக்கு… பிரதமரிடம் பேசணும்: சிட்னி போலீஸை மிரட்டிய தீவிரவாதி
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லிண்ட் கஃபே என்ற பிரபல ஓட்டலில் இருந்த பொதுமக்கள், ஊழியர்களை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் ஏராளமான பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்திருப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ள அந்த மர்மநபர் தன்னிடம் நான்கு வெடிகுண்டுகள் இருப்பதாகவும், பிரதமரிடம் பேசவேண்டும் என்றும் சிட்னி போலீஸை மிரட்டியதாக கூறப்படுகிறது.
சிட்னி நகரில் இன்று காலை 9.30 மணியளவில் அலுவலகம் போகும் நேரத்தில் லிண்ட் கஃபேவிற்குள் காபி சாப்பிட ஏராளமான பொதுமக்கள் சென்றனர். காலை நேரத்தில் பரபரப்பாக இருந்த அந்த ஹோட்டலுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக்கொண்டான்.
இது குறித்த தகவல் வெளியானதும் போலீஸாரும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் அங்கு விரைந்தனர். தொலைக்காட்சி சேனலில் காட்டப்பட்ட காட்சி ஒன்றில், ஓட்டலுக்குள் பிடிபட்டிருக்கும் பொதுமக்கள் சிலர் ஜன்னலோரம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் கைகளில் கருப்புக்கொடி கொடுக்கப்பட்டுள்ளதும் பதிவாகியுள்ளது.

அந்தக் கொடியில், வெள்ளை நிறத்தில் அரபு மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். எனவே, இது இஸ்லாமிய போராளிகள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் செயலாக இருக்கலாமோ என சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சிரியா, இராக்கில் போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியாவும் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதற்கு பதிலடியாக ஐ.எஸ். அமைப்பு இத்தகைய தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மர்ம நபருடன் போலீஸ் பேச்சுவார்த்தை
ஓட்டலில் ஊழியர்கள், பொதுமக்களை சிறைபிடித்து வைத்துள்ள மர்ம நபரை போலீஸார் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பிணைக்கைதிகளை பிடித்துவைக்க காரணம் என்ன? அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என விசாரணை மேற்கொண்டனர்.
நான்கு வெடிகுண்டுகள்
அவர்களிடம் பேசிய அந்த மர்மநபர், தன்னிடம் நான்கு வெடிகுண்டுகள் இருப்பதாகவும், தன்னை தாக்கி பிடிக்க நினைத்தால், அவற்றை வெடிக்கச் செய்துவிடுவேன் என்றும் போலீசிடம் மிரட்டியுள்ளான். பிரதமரிடம் உடனடியாக பேசவேண்டும் என்றும் அவரிடம்தான் தன்னுடைய கோரிக்கைகளை கூறுவேன் என்றும் அந்த நபர் வலியுறுத்தியுள்ளான்.
5 பேர் தப்பினர்
இந்நிலையில், ஓட்டலில் 8 மணிநேரம் பிணைக்கைதியாக இருந்தவர்களில் 5 பிணைக்கைதிகள் தப்பிவந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தீவிரவாதிகள் தங்களை துன்புறுத்தவில்லை என்று அவர்கள் கூறியதாக மெல்போர்ன் போலீஸ் துணை ஆணையர் கேத்தரின் பர்ன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் ஆலோசனை
இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், அமைச்சரவை கூட்டத்தை அவசரமாகக் கூட்டி, ஓட்டலில் பிணைக்கைதிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக அபாட் ஏற்கெனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications