சிக்கித் தவிக்கும் சிரியா.. கதறித் துடிக்கும் அப்பாவி மக்கள்.. கடலில் கரையும் உயிர்கள்
டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்து வரும் தொடர் மோதல் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைக்க உயிரைப் பணயம் வைத்து தப்பி ஓடுகிறார்கள் அப்பாவி மக்கள். இதில் கடலில் பலர் தொடர்ந்து படகு மூழ்கி பலியாகும் அவலமும் தொடர்கிறது.
சிறுவன் அய்லானின் உயிற்ற உடல் கரை ஒதுங்கிய சம்பவம் உலக மக்கள் மனதை உலுக்கி எடுத்துள்ளது. இன்னும் எத்தனை உயிரை இந்த சிரியப் போர் காவு கேட்கப் போகிறது என்ற கோபக் குரல் உலகெங்கும் ஒலித்து வருகிறது.
சிரியப் போர் குறித்த சில பின்னணித் தகவல்களை இப்போது தெரிந்து கொள்வது அவசியம். பல ஆயிரம் உயிர்களைப் பறித்து விட்ட இந்தப் போரின் கொடூர முகம் மனிதத் தன்மை செத்துப் போய் விட்டதா என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிரியா
சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல இடங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். அதேபோல ஈராக்கின் பல பகுதிகளையும் அவர்கள் பிடித்துள்ளனர்.

சிரிய உள்நாட்டுப் போருடன்
ஏற்கனவே சிரியாவில் உள்நாட்டுப் போர் உக்கிரமாக இருந்தது. தற்போது ஐஎஸ் தீவிரவாதிகளும் இதை மேலும் அதிகப்படுத்தி சிரியாவை சின்னாபின்னமாக்கி வருகின்றனர்.

2001ல் தொடங்கிய உள்நாட்டுப் போர்
2011ல்தான் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. பள்ளிக் கூட சுவர் ஒன்றில் புரட்சிகர வாசகங்களை எழுதிய சில டீன் ஏஜ் மாணவர்களை ராணுவம் கைது செய்து சித்திரவதை செய்த செயலைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது. அது உள்நாட்டுப் போராக மாறியது.

பல ஆயிரம் பேர் பலி
முதலில் சாதாரணமாக தொடங்கியது இந்த மோதல். ஆனால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் பலியானதால் நாடு முழுவதும் உள்நாட்டுக் கலவரமாக பரவி போராக மாறியது.

அதிபர் அசாத்துக்கு எதிரான போர்
அதிபர் அசாத்துக்கு எதிரான போராக இது மாற்றம் பெற்று தேசிய அளவில் சிரியாவை நிர்மூலமாக்கி விட்டது. பல லட்சம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான உயிர்கள் பறி போய் விட்டன.

இதுவரை 2.20 லட்சம் பேர் பலி
இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள்தான். அதிலும் பெண்கள், குழந்தைகள்தான் அதிகம்.

சாப்பாடு இல்லை, மருந்து இல்லை
உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல் காரணமாக சிரியாவில் உணவுப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு உள்ளது. மருந்துகள் கூட கிடைப்பதில்லை.

70 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்
உள்நாட்டுப் போர் காரணமாக சிரியாவுக்குள்ளேயே கிட்டத்தட்ட 70.6 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர். மொத்தம் 1.1 கோடி பேர் வீடுகளை இழந்துள்ளனர். நாட்டின் பாதி மக்கள் தொகை இடம் பெயர்ந்த கொடுமை சிரியாவில் நடந்துள்ளது.

மனிதாபிமான உதவி கோரும் 50.6 லட்சம் சிறார்கள்
மொத்தம் உள்ள 1.22 கோடி பேரில் 50.6 லட்சம் பேர் சிறார்கள் ஆவர். இவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் பெருமளவில் தேவைப்படுவதாக ஐ.நா. கூறியுள்ளது.

ஜோர்டான், லெபனானில் தஞ்சம்
பல லட்சம் சிரிய அகதிகள் ஜோர்டான் மற்றும் லெபனானில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை ஐ.நா மூலமாக செய்து வருகின்றனர்.

நாசமாகிப் போன பொருளாதாரம்
உள்நாட்டுப் போர் காரணமாக சிரியாவின் பொருளாதாரம் சீர்குலைந்து போய் விட்டது. அந்த நாட்டின் பொருளாதார இழப்பு மட்டும் 202 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அங்கு ஐந்தில் 4 சிரியர்கள் வறுமையில்தான் வாழ்கின்றனர். 30 சதவீதம் பேர் வறுமையால் உயிரிழந்துள்ளனர்.

சீரழியும் கல்வி, சுகாதாரம்
உள்நாட்டுப் போரால் அங்கு கல்வி, சுகாதாரம், சமூக நல கட்டமைப்புகள் முற்றிலும் சீர்குலையும் அபாயத்தில் உள்ளன.

அமெரிக்க கூட்டுப் படையால் லாபம் இல்லை
2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர், ஐஎஸ் நிலைகளைக் குறி வைத்து விமானத் தாக்குதலை நடத்தின. ஆனால் இதுவரை பிரயோஜனம் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications