மிரட்டிய சீனாவுக்கு இடியாக மாறிய ரிசல்ட்! தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி
தைபே: தைவானில் இன்று அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. சீனாவின் பகிரங்க மிரட்டலுக்கு இடையே விறு விறுப்பாக நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஆசியாவில் யாராலும் அசைக்க முடியாத நாடாக வலம் வர வேண்டும் என்ற கனவுடன் வலம் வரும் சீனா அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் சீனாவை ஒட்டி அமைந்து இருக்கும் தைவானையும் சீனா விட்டு வைக்கவில்லை. தைவானையும் உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு பின்னணியில் முக்கியமாக ஒரு காரணமாகவும் உள்ளது.

அதாவது, ஒருங்கிணைந்த சீனாவுடன் அங்கம் வகித்த தைவான் உள்நாட்டு போருக்கு பிறகு 1949-ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்தது. தைவான் தனிநாடாக செயல்பட சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவின் ஒரு பகுதியாக தைவான் உள்ளதாக அந்நாடு கூறி வருகிறது. தைவானுக்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இது சீனாவுக்கு மேலும் எரிச்சலை கொடுத்து வருகிறது.
அமெரிக்கா அரசியல் தலைவர்கள் தைவானுக்கு விசிட் செய்யும் போதெல்லாம் சீனா கடும் கண்டனங்களையும் எச்சரிக்கையையும் விடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. தைவானில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போது அதிபராக இருக்கும் சை இங் வென்- யின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் புதிய அதிபர் தேர்வு செய்வதற்கான தேர்தல் தைவானில் இன்று நடைபெற்றது.
23.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தைவானில் விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்றது. இன்று மாலை 4 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் லை சிங் டி துவக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்தார். இறுதி வரை முன்னிலை பெற்ற அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணை அதிபராக இருந்த லை சிங் டி அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். இவரே தைவானின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். அமெரிக்காவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க கூடியவராக லை சிங் டி அறியப்படுகிறார். இவரை பிரிவினைவாதி என சீனா முத்திரை குத்தியுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணரான லை, தனது பணியை விட்டு விட்டு அரசியலுக்கு வந்தார். சீனாவின் அனைத்து முயற்சிகளை முறியடிப்பேன் என்றும் தைவானின் ஜனநாயகத்தை காப்பேன் என்பதும் இவரது கருத்தாக இருந்தது.
முன்னதாக தைவானுக்கு சீனா கடும் எச்சரிக்கையை விடுத்து இருந்தது. தைவானின் சுதந்திரத்திற்கான சதிகளை முறியடித்தே தீருவோம் என்று சீன ராணுவம் எச்சரித்து இருந்தது. சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகையில், தைவானை சீனாவுடன் இணைப்பது என்பது வரலாற்று ரீதியாக தவிர்க்க முடியாதது” என்று கூறியுள்ளது. தைவானில் இன்று தேர்தல் நடந்து வருவதால் வான்வெளியாகவும் கடல் வழியாகவும் கண்காணிப்பை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications