"Mi-24V".. ஆப்கான் ராணுவத்திற்கு இந்தியா தந்த ஹெலிகாப்டரை கைப்பற்றிய தாலிபான்.. பரபரப்பு திருப்பம்!
காபுல்: ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய பாதுகாப்பு துறை சார்பாக வழங்கப்பட்ட Mi-24V ரக அட்டாக் ஹெலிகாப்டரை தாலிபான் படைகள் கைப்பற்றி உள்ளது. ஆப்கானிஸ்தானின் குன்டூஸ் விமான நிலையத்தில் இந்த ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டு இருந்தது. இங்கு நடந்த மோதலில் நேற்று தாலிபான்களிடம் ஆப்கான் படைகள் சரண் அடைந்தது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் படைகள் மிக வேகமாக முன்னேறி வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவிகித நகரங்களை தாலிபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. எண்ட் கேம் என்று ஆங்கிலத்தில் சொல்வது போல கடைசி கட்ட மோதலில்தான் தற்போது தாலிபான் படைகளும் ஆப்கான் படைகளும் மோதி வருகின்றன. இப்போது வரை தாலிபான்களின் கையே ஓங்கி இருக்கிறது.
முக்கியமான 9 மாகாண தலைநகரங்களை தாலிபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லை பகுதிகளையும் கூட தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது.

நிலைமை என்ன
அதோடு காபூலில் சில முக்கிய பகுதிகள், இஸ்லாம் குவாலா, அபு நாசர் பராஹீ போர்ட், தோர்குந்தி, சராஞ் போன்ற எல்லையோர பகுதிகள் தாலிபான்கள் வசம் சென்றுவிட்டது. இதுபோக கந்தகார், மஸார் இ ஷெரிப் போன்ற முக்கிய நகரங்களில் தாலிபான்கள் வெற்றிக்கு மிக அருகில் இருக்கின்றன. இந்த நகரங்களையும் கைப்பற்றிவிட்டால் தாலிபான்கள் மொத்தமாக ஆப்கானிஸ்தானில் வெற்றிபெற்றுவிடும்.

முன்னேற்றம்
இப்படி தாலிபான் படைகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில்தான் தற்போது இந்திய பாதுகாப்பு துறை சார்பாக ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு கொடுக்கப்பட்ட ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா போரிட்டு வந்த வரை, இந்தியாவும் ஆப்கான் படைகளுக்கே ஆதரவு அளித்து வந்தது. ஆப்கானிஸ்தானில் ராணுவ ரீதியாக ஒரு பக்கம் பயிற்சிகளையும் இன்னொரு பக்கம் பொருளாதார ரீதியான உள்கட்டமைப்பு உதவிகளையும் செய்து வந்தது.

ஹெலிகாப்டர்கள்
அதன் ஒரு கட்டமாக 2019ல் இந்தியா சார்பாக ஆப்கானிஸ்தான் படைகளுக்கு 4 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டது. Mi-24V என்ற வகையை சேர்ந்த வலிமையாக அட்டாக் ஹெலிகாப்டர்கள் ஆகும் இது . ஆப்கானிஸ்தான் மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையில் செய்யப்பட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் பொருளாதார உதவியோடு இந்த ஹெலிகாப்டர் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு வழங்கப்பட்டது.

வெற்றி
இதைத்தான் தற்போது ஆப்கானிஸ்தான் படைகளை வீழ்த்தி தாலிபான்கள் கைப்பற்றி உள்ளது. 4 ஹெலிகாப்டரில் ஒரு ஹெலிகாப்டர் தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்கானிஸ்தானின் குன்டூஸ் விமான நிலையத்தில் இந்த ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டு இருந்தது. இங்கே ஆப்கானிஸ்தான் படைகளை வீழ்த்தி தாலிபான்கள் வென்றது. இதையடுத்து அங்கு இருந்த ஹெலிகாப்டரையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளது.

உதவி
இந்த ஹெலிகாப்டருடன் தாலிபான் படைகள் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தாலிபான் படைகள் ஏற்கனவே அமெரிக்க ராணுவம் விட்டு சென்ற ஆயுதங்கள், டாங்கிகள், வெடி குண்டுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது முக்கியமான ஹெலிகாப்டரான இதையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளது. இது தாலிபான்களின் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.

கோரிக்கை
இன்னும் 90 நாட்களுக்குள் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வெற்றிபெறும். மொத்தமாக நாட்டை கைப்பற்றும் என்று அமெரிக்க உளவு செய்தி தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்றபடியே தாலிபான்கள் தற்போது மிக வேகமாக முன்னேறி வருகிறது. அதிலும் இந்தியா கொடுத்த இந்த ஹெலிகாப்டரை மிக முக்கியமான நேரத்தில் தாலிபான் படைகள் கைப்பற்றி உள்ளன. இந்தியாவின் உதவியை ஆப்கானிஸ்தான் அரசு நேரடியாக கேட்டு வருகிறது.

இந்தியாவின் உதவி முக்கியம்
தாலிபான் படைகளுக்கு பாகிஸ்தான் உதவி வரும் நிலையில், இந்திய படைகள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆப்கான் அரசு வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவின் வான்வெளி உதவி எங்களுக்கு தேவை. ஆப்கான் படைகளுக்கு உதவியாக இந்தியா இருக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் காணி தெரிவித்துள்ளது. அமெரிக்க படைகள் சென்றதால் இந்தியாவின் உதவி வேண்டும் என்று அவர் வெளிப்படையாக கேட்டு இருக்கிறார்.

இந்தியா நிலைப்பாடு
ஆனால் இந்தியா இதில் வெளிப்படையாக நிலைப்பாடு எதுவும் எடுக்கவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் ஷாங்காய் கோ ஆபரேஷன் மீட்டிங்கில் கூட இந்தியா ஆப்கான் போர் குறித்து கருத்து தெரிவித்தது. அதில். ஆப்கானிஸ்தானில் அமைதி வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.அங்கு ஆயுதத்தை பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கூடாது. தீவிரவாதத்திற்கு நாங்கள் ஆதரவு தர முடியாது. எந்த மாற்றமும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நடக்க வேண்டும். இரண்டு தரப்பும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். ஆப்கானிஸ்தான் மீண்டும் முன்பு இருந்த மோசமான நிலைக்கு செல்வதை இந்தியாவும் விரும்பாது, ஆப்கானிஸ்தான் அரசும், மக்களும் விரும்பாது.

ஒப்பந்தம்
இதுவரை செய்யப்பட்ட ஒப்பந்தங்களை மதித்து இரண்டு தரப்பும் அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். ஆயுத மோதலை நிறுத்த வேண்டும், என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி இருந்தார். இந்த நிலையில்தான் இந்தியாவின் வான்வெளி உதவியை ஆப்கான் படைகள் கேட்டுள்ளது. ஆனால் சில நாட்களுக்கு முன் பேசிய தாலிபான் தரப்பு, ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியா உதவி செய்வதில் தவறு கிடையாது. இதை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பும் கூட ஆப்கானிஸ்தானுக்கான உதவியை வரவேற்கிறோம்.ஆனால் ஆப்கானிஸ்தானின் தற்போதைய அரசுக்கு இந்தியா உதவ கூடாது. இந்தியா இதில் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இந்தியா தற்போது உள்ள ஆப்கான் அரசுக்கு எந்த மாதிரியான ராணுவ உதவியையும் செய்ய கூடாது என்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications