பெண்களுக்கெல்லாம் இடம் தர முடியாது.. ஆப்கானை கலங்கடித்த தாலிபான் உத்தரவு.. வீதிக்கு வந்த பெண்கள்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளில் தாலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராடி வருகிறார்கள்.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் மொத்தமாக வெளியேறிவிட்டது. இதையடுத்து அங்கு தாலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளது. இன்று இரவு அல்லது இன்னும் சில மணி நேரங்களில் தாலிபான்கள் அதிகாரப்பூர்வமாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாலிபான் அமைப்பின் உட்சபட்ச தலைவரான ஹிபாதுல்லா அகுண்ட்சாடா அந்த நாட்டின் தலைவராக பதவி ஏற்க உள்ளார்.
சுப்ரீம் லீடர் என்ற பொறுப்பில் இவர் பதவி ஏற்க இருக்கிறார். இவருக்கு கீழ்தான் பிரதமர் மற்றும் மற்ற அமைச்சர்கள் வருவார்கள். கந்தகாரில் அவர் ஏற்கனவே இதற்கான பணிகளை தொடங்கிவிட்டார்.

தாமதம்
இவருக்கு கீழ் 11 முதல் 72 கவுன்சில் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமராக அப்துல் காணி பராதர் அல்லது முல்லா பராதர் அல்லது முல்லா யாகூப் ஆகியோரில் ஒருவர் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அமைச்சர்களை தேர்வு செய்வதில் இன்னும் குழப்பம் தீரவில்லை. இதனால் பதவி ஏற்பதில் தாமதம் ஏற்படலாம் என்கிறார்கள்.

மாற்றம்
இந்த நிலையில் ஆட்சி பொறுப்பு எதிலும் பெண்களுக்கு இப்போதோ எதிர்காலத்திலோ வாய்ப்பு கொடுக்கப்படாது என்று கூறப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு எந்த விதமான முக்கிய பொறுப்பும் வழங்கப்படாது என்று தாலிபான்கள் முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வருகிறது. முக்கிய பொறுப்புகளை பெண்களுக்கு வழங்க முடியாது. அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் கிடையாது என்று தாலிபான்கள் தெரிவித்ததாக தகவல்கள் வருகின்றன.

ஆப்கான்
முந்தைய ஆப்கான் ஆட்சியில் 3 பெண் கவர்னர்கள் உட்பட பல பெண் உயர் அதிகாரிகள் இருந்தனர். ஆனால் தாலிபான் ஆட்சியில் கவர்னர் உட்பட எந்த பதவியிலும் பெண்களுக்கு இடமளிக்கப்படாது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாலிபான் காபூலில் வெற்றியடைந்த போது ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கும் இடம் அளிக்கப்படும் என்று கூறியது. ஆனால் அந்த வாக்கை காப்பாற்றாமல் தற்போது பெண்களை தாலிபான்கள் புறக்கணித்து உள்ளது.

புறக்கணிப்பு
தாலிபான்களின் இந்த முடிவு எங்கே அவர்களின் ஆட்சி முறை பழைய 1996 தாலிபான் ஆட்சி முறை போல இருக்குமோ, பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் இருக்குமோ என்ற அச்சத்தை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு தாலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். ஹெராத் பகுதியில் தாலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராடி வருகிறார்கள். 100க்கும் அதிகமான பெண்கள் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள்.

போராட்டம்
தாலிபான்கள் இப்படி செய்திருக்க கூடாது. அவர்களின் முடிவு தவறானது. அவர்கள் பெண்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஆட்சியில் இருந்து விலக வேண்டும். பெண்களுக்கான உரிமையை தாலிபான்கள் மறுக்க கூடாது என்று கூறி பெண்கள் அங்கு பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications