தடை அதை உடை... அலங்காநல்லூர் சகோதர, சகோதரிகளுக்காக லண்டனில் ஆர்ப்பரித்த தமிழர்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் கூடி இந்தியத் தூதரகம் முன்பு முழக்கப் போராட்டம் நடத்தினர்.
லண்டன்: அலங்காநல்லூர் உள்பட தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் இந்தியத் தூதரகம் முன்பு தமிழர்கள் கூடி எழுச்சியுடன் போராட்டம் நடத்தினர்.
தடை அதை உடை, மோதாதே மோதாதே தமிழகத்துடன் மோதாதே, ஜல்லிக்கட்டு தடையை நீக்கு பாரம்பரியத்தைத் தூக்கி நிறுத்து, தமிழா தமிழா ஒன்றுபடு வெற்றி வரும் வரை போராடு.. லண்டன் இந்தியத் தூதரகம் உள்ள பகுதியை அதிர வைத்த முழக்கங்களில் சில இது.
இங்கிலாந்தில் வசித்து வரும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதி முறையில் பல்வேறு வகையில் தங்களது உணர்வுகளைக் காட்டி வருகின்றனர்.

இந்தியத் தூதரகம் முன்பு முழக்கம்
இந்த நிலையில் லண்டனில் வசித்து வரும் இந்தியர்கள் கூடி அங்குள்ள இந்தியத் தூதரகத்திற்கு வெளியே கூடி அமைதி முறையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்துடன் மோதாதே
லண்டன் நேரப்படி 17ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திரளான இந்தியர்கள் கூடி உணர்ச்சிப் பெருக்குடன் முழக்கமிட்டனர். பீட்டாவைக் கண்டித்தும், தமிழகத்துடன் மோதாதே என்று எச்சரித்தும் அனைவரும் முழக்கமிட்டனர்.

கோரிக்கை மனு
முழக்கப் போராட்டத்தின் இறுதியில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தூதரகத்தில் மனு ஒன்றும் அளிக்கப்பட்டது. தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் கூடி நடத்திய இந்தப் போராட்டம் அப்பகுதியினரின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது.
உலகம் முழுவதும் போராட்டம்
தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்கள் நடக்கவில்லை. மாறாக பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் திரண்டு அமைதி வழியில் பல்வேறு வகையான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications