பலாத்கார குற்றவாளிகளுக்கு பரிட்சை நடத்த வந்த ஆசிரியை பலாத்காரம்!
பீனிக்ஸ்: அறை முழுவதும் பாலியல் பலாத்கார குற்றவாளிகளை நிரப்பி ஒரு ஆசிரியையை அங்கே அனுமதித்ததன் விளைவு அந்த ஆசிரியை சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள சிறைச்சாலையில் பாலியல் குற்றவாளிகள் சுமார் 1300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் இருந்தபடி கல்வி கற்போரும் உள்ளனர். இவர்களுக்கு பரிட்சை நடத்துவதற்காக இளம் ஆசிரியை ஒருவர் கடந்த ஜனவரி 30ம்தேதி சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.
பரிட்சை நடத்த ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் 6 கைதிகள் அமர்ந்து தேர்வெழுதினர். அனைவருமே ஏதாவது ஒரு வகையில் பலாத்கார சம்பவங்களில் தொடர்புடையவர்களாக இருந்து தண்டனை பெற்றவர்கள்தான். அப்படியிருந்தும்கூட, பரிட்சை நடந்த இடத்தில் கைதிகளையும், ஆசிரியையும் தவிர வேறு பாதுகாவலர்கள் ஒருவரும் நியமிக்கப்படவில்லை. அவசர தேவையென்றால் அழைப்பதற்காக ரேடியோ ஒன்றை கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் தேர்வு நேரம் முடிவதற்குள் ஐந்து கைதிகள் பரிட்சையை எழுதிவிட்டு கிளம்பிவிட்டனர். அதில் ஜேக்கப் ஹார்வி என்ற கைதி மட்டும் கடைசி நிமிடம் வரை தேர்வெழுதியுள்ளான். ஆசிரியை மட்டும் தனியாக இருப்பதை பயன்படுத்திக்கொண்ட ஜேக்கப், திடீரென அவர் மீது பாய்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். இதை எதிர்பார்க்காத ஆசிரியை, தன்னிடமிருந்த ரேடியோவை எடுத்து உதவி கேட்பதற்காக பேசமுயன்றார். அப்போதுதான், அந்த ரேடியோ அலைவரிசை தவறாக வடிவமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் பாதுகாவலர்களின் ரேடியோவுக்கு இவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
வெறுத்துப்போன ஆசிரியை பலாத்காரத்துக்கு உடன்பட மறுத்து ஜேக்கப்பை அடித்து உதைத்துள்ளார். அப்போது தன்னிடமிருந்த பேனாவால் ஆசிரியையின் தலையில் குத்திய ஜேக்கப் அவரை அடித்து உதைத்து பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டான். இதுகுறித்து, அப்போது, சிறைத்துறை பெரிதாக செய்தி வெளியிடவில்லை. இப்போது அமெரிக்க பத்திரிக்கைகள், அரிசோனா பொது பதிவாக்க சட்டத்தின்கீழ் தகவல் சேகரித்து, நடந்த சம்பவத்தை விலாவாரியாக வெளியே கொண்டுவந்துள்ளன.
அமெரிக்க சிறைச்சாலையொன்றின் பாதுகாப்பு குறித்து இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜேக்கப் ஹார்வி தனது 17வயதில் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டு ஒரு வீட்டுக்குள் புகுந்து சென்று, 2 வயது குழந்தையின் கண்ணெதிரிலேயே அதன் தாயை பலாத்காரம் செய்துள்ளான். இதற்காக அவனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் நடைபெறுவதற்கு 6 மாதங்கள் முன்புதான், அரிசோனா சிறையில் அடைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.