பயபுள்ள, என்ன 'திரில்'லிங்கா திருடிட்டு ஓடிட்டான் பாருங்க...!
பான், ஜெர்மனி: திருட்டுத்தனத்தில் இப்படியும் ஒரு 'நாவல்' தன்மையை எங்கேயும் பார்த்திருக்க முடியாது. ஜெர்மனியில் 16 வயதேயான ஒரு சிறுவன் பொம்மை துப்பாக்கியைக் காட்டி வங்கியில் திருடி விட்டு, சைக்கிளில் ஏறி தப்பி ஓடிய சம்பவம் அந்த ஊர் போலீஸாரை மக்கள் பார்வையில் கேலிப் பொருளாக்கி விட்டது.
இவன் சும்மா திருடவில்லை.. நூற்றுக்கணக்கான ஈரோ பணத்தையும் சுட்டு விட்டு போய் விட்டான். இத்தனைக்கும் இவன் சாதாரண பொம்மைத் துப்பாக்கியைக் காட்டித்தான் இந்த துணிகர திருட்டை நடத்தியுள்ளான்.
ஜெர்மனியின் பேட் புஸ்ஸிங் என்ற ஊரில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வங்கிக்கு 16 வயது சிறுவன் சைக்கிளில் வந்தான். வந்தவன் வேகமாக உள்ளே நுழைந்தான். பின்னர் ஒரு துப்பாக்கியைக் காட்டி வங்கி மேலாளரையும், ஊழியர்களையும் மிரட்டினான். அத்தனை பேரும் பயந்து போய் விட்டனர்.
பின்னர் மேனேஜரிடம் துப்பாக்கியை நீட்டி, நான்கு இலக்க அளவிலான பணத்தை எடுத்து பாக்கெட்டில் வைக்குமாறு கூறினான். அவரும் உடனே அதைச் செய்தார். பின்னர் வேகமாக வெளியே வந்த அவன் தான் வந்த சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டான்.
ஆனால் பையன் வந்த வேகத்தையும், நடந்ததையும் ஊகித்த காரில் வந்த ஒரு நபர் அந்த பையனை துரத்திப் பிடித்து விட்டார். எல்லாம் நடந்து பல நிமிட நேரத்திற்குப் பின்னர்தான் போலீஸார் வந்து பையனைப் பிடித்தனர்.
விசாரணையில் அவன் வைத்திருந்தது பொம்மைத் துப்பாக்கி என்று தெரிய வந்தது. அந்தப் பையன் ஆஸ்திரியாவுக்குத் தப்பி ஓட முயன்றதும் தெரிய வந்தது.